பெங்களூரு-சென்னை டபுள் டெக்கர் ரயிலில் ஏசி பழுது: பயணிகள் மயக்கமுற்றதால் பீதி
வேலூர்: பெங்களூருவில் இருந்து சென்னை வரும் டபுள்டக்கர் ஏசி ரயில், நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்பட்டது. ரயில் புறப்பட்ட சிறிது நேரத்தில் சி3 பெட்டியில் ஏசி இயங்காமல் பழுதடைந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் காரணமாக அந்த பெட்டியில் இருந்த சிலருக்கு லேசான மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ரயில்வே ஊழியர்கள் வந்து சரிபார்த்தனர். ஆனால் சரி செய்யமுடியவில்லை.

இந்நிலையில் மாலை 4.30 மணியளவில் ரயில், ஜோலார்பேட்டை ரயில் நிலையத்துக்கு வந்து நின்றது. ஏசி பெட்டியில் ஏற்பட்ட கோளாறு குறித்து பயணிகள் அதிகாரிகளிடம் தெரிவித்தனர். அவர்களை அதிகாரிகள் சமாதானப்படுத்தினர். மாலை 5 மணியளவில் ரயில் காட்பாடி ரயில் நிலையத்திற்கு அருகில் வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த ரயில்பெட்டியில் இருந்த 10 பயணிகள் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த சக பயணிகள் பீதியுடன் கூச்சலிட்டனர்.
இதற்கிடையே காட்பாடி ரயில் நிலையத்தில் நின்றது. டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு, மயக்கமடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் சி3 பெட்டியில் இருந்த பயணிகள் காட்பாடி ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்த அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது ரயில்வே ஊழியர்கள் விரைந்து வந்து பழுதான ஏசி பெட்டியில் உள்ள இரண்டு கதவுகளை அதிரடியாக உடைத்து மற்ற பயணிகளுக்கு காற்று செல்வதற்கு வசதி ஏற்படுத்தி கொடுத்தனர்.
ஆனால் பயணிகள் தரப்பில் ஏசி பழுதாகி உள்ள பெட்டியில் பயணம் செய்ய முடியாது என்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எனவே ரயில் காட்பாடியிலேயே நிறுத்தப்பட்டது. உடனடியாக அங்கு வந்த ரயில்வே பாதுகாப்புப்படை போலீசார் பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், பயணிகள் அந்த பெட்டியில் மீண்டும் பயணம் செய்ய முடியாது என்று உறுதியாக கூறிவிட்டனர். இதையடுத்து அந்த பெட்டியில் இருந்த அனைத்து பயணிகளையும் மற்ற பெட்டிகளில் காலியாக இருந்த இருக்கைகளில் அமரவைத்து சமாதானம் செய்தனர்.
இதனால் அங்கிருந்து ஒரு மணி நேரம் தாமதமாக ரயில் புறப்பட்டது. அரக்கோணம் சென்றதும் மீண்டும் பயணிகள் கீழே இறங்கி அங்குள்ள அதிகாரியிடம் புகார் தெரிவித்து ஏசி பெட்டியை சரி செய்யும்படி கூறினார். அதை உடனடியாக சரி செய்ய முடியாது என்பதால் சென்னை வரை பொறுத்துக்கொள்ளும்படி அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் வேறு வழியில்லாமல் அந்த ரயிலில் பயணிகள் சென்னை சென்றனர்.
ரயில் பெட்டியில் பயணிகள் மயக்கம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், பீதியையும் ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications