மலர் மாலை, கிரீடம்.. ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியர்
Recommended Video
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் இன்று (06.09.2018) தமிழக அரசின் டாக்டர் இராதா கிருஷ்ணன் விருது பெற்ற தலைமையாசிரியர் ஆ. பீட்டர் ராஜாவுக்கு பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண்மைக் குழு, பள்ளி மேலாண்மை மற்றும் வளர்ச்சிக்குழு இணைந்து பாராட்டு விழா நடத்தியது.
பெற்றோர்கள், மாணவர்கள் இணைந்து தலைமையாசிரியர் அவர்களுக்கு மாலை அணிவித்து, மலர் கீரிடம் அணிவித்து மரியாதை செய்து, சந்தன, குங்குமத்துடன் கண்ணதாசன் மணிமண்டபத்தில் இருந்து ஆரியபவன் வழியாக ஊர்வலமாக அழைத்து வந்தனர். ஊர்வலத்தில் தலைமையாசிரியருக்கு மாணவர்கள் மலர் தூவியும், அவர் புகழ் பாடியும் வரவேற்றனர்.
அதை தொடர்ந்து நடந்த பாராட்டு விழாவில் பெற்றோர் வழிகாட்டுக் குழுத்தலைவர் தி. கலைமணி அனைவரையும் வரவேற்றார். விழாவில் தேவகோட்டை மாவட்டக்கல்வி அலுவலர், திருப்பத்தூர் மாவட்டக் கல்வி அலுவலர், தொழில் வணிகக்குழுத் தலைவர் திராவிடமணி, செக்காலை பங்குத்தந்தை எட்வின் ராயன், சேவுகன் அண்ணாமலைக் கல்லூரி முன்னாள் முதல்வர் முனைவர். சந்திர மோகன், சேவுகன் அண்ணாமலைக் கல்லூரி தமிழ் துறை பேராசிரியர் பாகை கண்ணதாசன், அழகப்பா பல்கலைக்கழக வரலாற்றுத் துறை தலைவர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதேபோல, அழகப்பா பல்கலைக்கழக கல்வியல் துறை பேராசிரியர் ராம்நாத், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக சிவகங்கை மாவட்டச் செயலர் கோவிந்தராஜ் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள், காரைக்குடி பியர்ல் சங்கமம் துணை ஆளுநர் முத்துக்குமார், பொற்கிழிக் கவிஞர் நாகப்பன், உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், பள்ளி மேலாண்மை மற்றும் வளர்ச்சிக்குழுத் தலைவர் சகாய செல்வன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
விழாவில் பள்ளி ஆசிரியர்கள் சந்தன மாலை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் அழகு சுந்தரி நன்றி கூறினார். நிகழ்ச்சிகளை பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சகாய அமலன் தொகுத்து வழங்கினார்.