பாரத் பந்த்: தமிழகத்தில் பல இடங்களில் ரயில் மறியல்.. நூற்றுக்கணக்கானோர் கைது
சென்னை : நாடு முழுவதும் மத்திய அரசுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் நடத்திய போராட்டத்திற்கு ஆதரவாக ரயில் மறியலில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சினர், தொழிற்சங்கத்தினர், விவசாயிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் பேருந்துகள் மீது கல்வீசி தாக்கப்பட்டதில் கண்ணாடிகள் நொறுங்கியதால் பதற்றம் ஏற்பட்டது.
தொழிலாளர் சட்ட திருத்தம், புதிய போக்குவரத்து சட்டம் போன்ற தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை மத்திய அரசு கைவிட வேண்டும் விலைவாசி உயர்வை கட்டுபடுத்த வேண்டும் என்பது உட்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 10 தேசிய தொழிற்சங்கங்கள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டன.
இன்று காலை 6 மணிமுதல் மாலை 6 மணிவரை நடைபெற்ற இந்த போராட்டத்தில் தொடங்கிய வேலை நிறுத்தத்திற்கு வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு, பல்வேறு மாநிலங்களை சேர்ந்த போக்குவரத்து தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்தன. எனினும் சென்னையில் பேருந்துகள் வழக்கம் போல இயங்கின. ஆட்டோ மற்றும் வாடகை கார்கள் ஓடியதால் சென்னையில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.

சென்னையில் ரயில் மறியல்
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். அப்போது மத்திய அரசுக்கு எதிராக அவர்கள் முழக்கமிட்டனர். ஜனநாயக மாதர் சங்கத்தலைவி வாசுகி பேசுகையில் பந்த் வெற்றிகரமாக நடைபெறுவதாக தெரிவித்தார்.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்
இதனிடையே சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட தயாராக இருந்த மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மறிக்க முயற்சி செய்தனர். இதற்கு போலீசார் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மறியலில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.
உள்ளிருப்பு போராட்டம்
அகில இந்திய அளவில் தொழிற்சங்கள் நடத்தி வரும் வேலைநிறுத்த போராட்டத்திற்கு திருச்சி ரயில்வே ஊழியர்கள் ஆதரவு தெரிவித்தனர். இதற்கு அடையாளமாக திருச்சி ரயில்வே பணிமனையில் 1000 தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூரில் பாதிப்பு
வேலைநிறுத்த போராட்டம் காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் 10,000 க்கும் மேற்பட்ட நூற்பாலைகள் மூடப்பட்டன. பனியன் நிறுவனங்கள் பலவும் மூடப்பட்டன. தனியார் பேருந்துகளும் இயக்கப்படவில்லை. ஒரு சில இடங்களில் உணவு விடுதிகள் மூடப்பட்டன. மாலை 6 மணிக்கு மேல் வழக்கம்போல இயங்கின.
பேருந்து மீது கல்வீச்சு
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு அருகே தமிழக-கேரள அரசு பஸ்கள் மீது கல்வீச்சசு நடத்தப்பட்டுள்ளன. இருவிபுதூர்கடை பகுதியில் பேருந்து கண்ணாடிகளை கல்வீசி தாக்கி விட்டு மர்ம நபர்கள் தப்பி ஓடியதால் பதற்றம் ஏற்பட்டது.
விருதுநகர் மாவட்டத்தில்
விருதுநகர், ராஜபாளையம், சிவகாசி உள்ளிட்ட பகுதிகளில் இந்திய மாணவர்சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இயக்கத்தினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கலந்துகொண்ட 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
புதுச்சேரியில் பாதிப்பு
பந்த காரணமாக புதுச்சேரி மாநிலத்தில் தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை. ஆட்டோ மற்றும் டெம்போக்கள் குறைந்த அளவே இயக்கப்படுகின்றன. நகர் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டன. தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. மாலையில் இயல்பு வாழ்க்கை திரும்பியது.












Click it and Unblock the Notifications