சென்னையில் பயங்கரம்... பைக் ஏறி சாலையோரம் தூங்கிய மூவர் பலி
சென்னை: சென்னை பாரிமுனையில் நள்ளிரவில் தாறுமாறாக ஓடிய பைக் ஏறி இறங்கியதில் சாலையோரம் தூங்கிய 3 பேர் உயிரிழந்தனர். 4 பேர் படுகாயமடைந்தனர்.
உயிரிழந்தவர்களின் பெயர் சின்ன பொண்ணு ,சகுந்தலா,மற்றும் திருநங்கை அப்பு. நேற்று இரவு இவர்கள் 3 பேரும் பாரிமுனையில் பூ வியாபாரம் செய்து வருகின்றனர். நேற்றிரவு வியாபாரத்தை முடித்து விட்டு, பாரிமுனை பழைய திருவள்ளுவர் பேருந்து நிலையம் அருகே உள்ள துறைமுகம் எம்.எல்.ஏ. அலுவலகம் அருகில் படுத்து உறங்கினர்.
நள்ளிரவு 2 மணி அளவில் மின்னல் வேகத்தில் வந்த பல்சர் மோட்டார் சைக்கிள் ஒன்று தாறுமாறாக ஓடி தூங்கி கொண்டிருந்தவர்கள் மீது ஏறி இறங்கியது.
மோட்டார் சைக்கிள் ஏறி நசுக்கியதால் 3 பேரின் மார்பு பகுதியில் எலும்புகள் உடைந்து நொறுங்கியது. இதனால் சம்பவ இடத்திலேயே சின்ன பொண்ணு, சகுந்தலா, அப்பு ஆகிய 3 பேரும் பலியானார்கள். இவர்களோடு தூங்கிக் கொண்டிருந்த மேலும் 4 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது.
சம்பவம் குறித்து அறிந்த போலீஸார் உடனடியாக அந்த இடத்துக்கு விரைந்து காயமடைந்தவர்களை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்ட போக்குவரத்துக் காவல்துறை அதிகாரிகள் கீழே விழுந்திருந்த செல்போன் ஒன்றைக் கைப்பற்றி அதன் மூலம் அதன் உரிமையாளர்களைக் கண்டறிந்தனர்.
இதனிடையே, விபத்து ஏற்படுத்திய இருசக்கர வாகனத்தில் வந்த 3 இளைஞர்களும், அங்கிருந்து தப்பித்து வாகனத்தை எடுத்துக்கொண்டு அவர்களுக்கு ஏற்பட்ட காயங்களுக்கு சிகிச்சை பெற ஸ்டான்லி மருத்துவமனைக்குச் சென்றனர்.
செல்போன் மூலம் கண்டறியப்பட்ட விவரங்களைக் கொண்டு அவர்களைப் பின் தொடர்ந்த போலீஸார், இளைஞர்கள் மூவரையும் கைது செய்தனர்.
விபத்து ஏற்படுத்திய இளைஞர்களில் இருவர் சாதிக் (19), மன்சூர் (18) என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள பூக்கடை காவல் நிலைய போலீஸார் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அவர்களிடம் தொடர் விசாரணை நடந்து வருகிறது. முதல் கட்ட விசாரணையில் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் கட்டுப் பாட்டை இழந்து விட்டதாகவும், அதனால்தான் விபத்து நடைபெற்று விட்டது என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications