டிஸ்கவுண்ட் ரேட்டில் பைக்... ஷோரூம்களில் நடக்குது பலே மோசடி.. உஷார் மக்களே!
ஸ்கூட்டர் வாங்க செல்லும் பெண்களை குறி வைத்துதான் இந்த மோசடியில் டூவீலர் ஷோரூம் ஊழியர்கள் ஈடுபடுகிறார்கள். பெண் கஸ்டமர்களுக்கு பைக்குகளின் மார்க்கெட் நிலவரம் தெரியாது என்பது இவர்கள் கணக்கு.
சென்னை: டூ வீலரை விற்று தீர்த்தாக வேண்டிய கட்டாயத்தில் சென்னை உட்பட நாட்டின் பல நகரங்களிலும் நேற்று விடிய விடிய ஷோரூம்கள் திறந்து வைக்கப்பட்டிருந்தன. அதேநேரம், வாடிக்கையாளர்களை ஏமாற்றி அதிக விலைக்கு டூ வீீலர் விற்பனை செய்யும் சம்பவங்களும் அரங்கேறுகின்றன.
ஏப்ரல் 1ம் தேதிக்கு பிறகு பி.எஸ்-3 அடிப்படையில் தயாரான டூவீலர், கார்களை விற்பனை செய்வது மற்றும் ரிஜிஸ்டர் செய்வது கூடாது என்று சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு ஒன்றை நேற்று முன்தினம் பிறப்பித்தது.
இதையடுத்து மார்ச் 31ம் தேதிக்குள் பைக்குகளை விற்பனை செய்ய ஷோரூம்களில் அதிரடி தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஹீரோ, ஹோண்டா போன்ற நிறுவனங்கள்தான் அதிக அளவில் டிஸ்கவுண்டுகளை அறிவித்துள்ளன. பஜாஜ் நிறுவனம் டிஸ்கவுண்டோடு சேர்த்து இலவச இன்சூரன்ஸ்சும் செய்து கொடுப்பதாக கூறியுள்ளது.

விடிய, விடிய
டிஸ்கவுண்ட் அளிக்கும் தகவல் வெளியானதும், நேற்று மாலை முதல் பைக் ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் இரவு விடிய விடிய ஷோரூம்கள் பல நகரங்களில் திறந்திருந்தன. சில பகுதிகளில், இரவு ஷோரூமை முடிவிட்டு இன்று அதிகாலை 3 மணிக்கெல்லாம் ஷோரூமை திறந்துள்ளனர்.

ஏமாற்று வித்தை
பெரும்பாலான டூவீலர்கள் விற்று தீர்ந்துவிட்ட நிலையில், மிச்சம் இருக்கும் டூவீலர்களில் கொள்ளை லாபம் பார்க்கிறார்கள் சில ஷோரூம் உரிமையாளர்கள். இந்த நூதன மோசடியை அறியாமல் கஸ்டமர்கள் ஏமாந்து பைக்குகளை வாங்கும் சம்பவங்கள் தமிழகத்தின் பல நகரங்களில் மட்டுமல்லாது நாடு முழுக்க அரங்கேறிவருகிறது.

திண்டுக்கல் கஸ்டமர்
திண்டுக்கல்லிலுள்ள ஒரு ஷோரூமில் ஸ்கூட்டர் வாங்கச் சென்ற ஒரு கஸ்டமரின் கதை இது. அவர் இன்று காலை யமகா நிறுவனத்தின் ரே-இசெட் வகை ஸ்கூட்டரை வாங்குவதற்காக ஒரு ஷோரூமுக்கு சென்றுள்ளார். ஷோரூம் ஊழியர்கள், இனிக்க இனிக்க பேசி அந்த பைக் குறித்து ஆதி முதல் அந்தம் வரை விவரமாக எடுத்துக் கூறியுள்ளனர்.

விலையை ஏற்றி வைத்து
ஆனால், கடைசியாக விலையை கேட்கும்போதுதான் விழிப்படைந்தார் அந்த கஸ்டமர். "இந்த ஸ்கூட்டருக்கு ரூ.20000 டிஸ்கவுண்ட் என்று ஷோரூம் ஊழியர் கூறியதும் மிகவும் சந்தோஷப்பட்டேன். ஆனால், ஸ்கூட்டரின் மொத்த விலையை ஷோரூம் ஊழியர் கூறிய பிறகுதான் இதில் நடக்கும் மோசடி தெரியவந்தது" என நம்மிடம் தெரிவித்தார் அந்த கஸ்டமர். குறிப்பிட்ட அந்த மாடல் ஸ்கூட்டரின் உண்மையான விலை ரூ.50 ஆயிரம்தான். ஆனால் இந்த கஸ்டமரிடம் ஷோரூம் ஊழியர் கூறியதோ, ஸ்கூட்டரின் உண்மையான விலை ரூ.70 ஆயிரம், டிஸ்கவுண்டில் இது ரூ.50 ஆயிரத்திற்கு கிடைக்கிறது என்று தெரிவித்துள்ளார். இப்படித்தான் நடக்கிறது மோசடி. ஆனால், செல்போனில் அந்த பைக் குறித்த விலை விவரத்தை கூகுள் செய்தபோது உண்மையை உணர்ந்து கொண்டார் நம்மிடம் பேசிய கஸ்டமர். உடனடியாக ஷோரூமை காலி செய்துவிட்டு வீட்டை நோக்கி விரைந்துவிட்டாராம்.

பெண்களே உஷார்
குறிப்பாக ஸ்கூட்டர் வாங்க செல்லும் பெண்களை குறி வைத்துதான் இந்த மோசடியில் டூவீலர் ஷோரூம் ஊழியர்கள் ஈடுபடுகிறார்கள். பெண் கஸ்டமர்களுக்கு பைக்குகளின் மார்க்கெட் நிலவரம் தெரியாது என்பது இவர்கள் கணக்கு. எனவே ஆண்களோ, பெண்களோ ஸ்கூட்டர், பைக்குகளை டிஸ்கவுண்ட் ரேட்டில் வாங்கச் செல்லும் முன்பாக இணையதளத்தில் அதன் உண்மை விலையை அறிந்து கொள்ளுங்கள். அப்போதுதான், இதுபோன்ற நூதன மோசடிகளை சமாளிக்க முடியும்.












Click it and Unblock the Notifications