வாய்க்கு வந்ததை வைகோ பேசிக் கொண்டிருந்தால் 500 ஓட்டு கூட கிடைக்காது.. எச்.ராஜா சாபம்!
சென்னை: விஜயகாந்த்துடன் பாஜக பேரம் பேசவில்லை என்று பிரேமலதா விஜயகாந்த் மறுத்துள்ளார். ஆனால் வைகோ தொடர்ந்து அதே குற்றச்சாட்டைக் கூறி வருகிறார். இப்படியே அவர் பேசிக் கொண்டிருந்தால் கிடைக்கும் 500 ஓட்டு கூட கிடைக்காமல் போய் விடும் என்று பாஜக சார்பில் தி.நகரில் போட்டியிடப் போகும் கட்சியின் தேசிய செயலாளர் எச். ராஜா கூறியுள்ளார்.
தமிழகத்தில் மே மாதம் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை எதிர்கொள்ள அனைத்துக் கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன.

பாஜக சார்பில் சென்னை தி.நகரில் எச்.ராஜா போட்டியிடவுள்ளார். இந்த நிலையில் செய்தியாளர்களை அவர் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ‘நாங்கள் விஜயகாந்திடம் பேரம் நடத்தியதாக வைகோ கூறுகிறார். ஆனால் இதற்கு பிரேமலதாவே மறுப்பு தெரிவிக்கும் வகையில் விஜயகாந்த் யாருடனும் கூட்டணி தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தவில்லை. பேரம் நடத்தவில்லை என்று தெளிவாக கூறி விட்டார். மேலும் ஜவடேகருடன் நடந்த சந்திப்பு கூட மரியாதை நிமித்தமானது என்றும் தெளிவாக தேமுதிக கூறி உள்ளது.
அதன் பிறகும் இப்படி குற்றச்சாட்டுகளை வைகோ கூறுவது, விஜயகாந்த் பொய் சொல்கிறார் என்ற அர்த்தத்தில் வைகோ கூறுவதாகவே அர்த்தம் வரும். வைகோ ஒரு நிலையற்ற, பொறுப்பற்ற தலைவர். அவர் வாய்க்கு வந்ததை எல்லாம் பேசிக் கொண்டு இருந்தால், ஒரு தொகுதியில் அவருக்குள்ள 500 ஓட்டுக்கள் கூட கிடைக்காமல் போய் விடும்.
வைகோ தனது குற்றச்சாட்டை வாபஸ் பெற வேண்டும். இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். இதே குற்றச்சாட்டிற்காக திமுக வழக்கு போட்டது போல், பாஜக வழக்கு போடாது. ஏனென்றால், அதற்கு கூட வைகோ தகுதியானவர் கிடையாது என்பதே எனது கருத்து.
ஒரு லட்சியத்திற்காக கூட்டணி சேரும் போது ஏற்படும் பிரச்சினைகள் சீக்கிரம் சரியாகி விடும். ஆனால் வைகோ, அதிகார பசிக்காக கூட்டணி அமைத்து இருக்கிறார். அவர் இருக்கும் இடத்தில் எல்லாம் பிரச்சினை இருக்கும். அவர் சீக்கிரம் தனது வேலையை காட்டி விடுவார் என்றார் ராஜா.












Click it and Unblock the Notifications