இந்த கூத்த பாருங்க.. மடத்துக்குளம் பாஜக கூட்டணி வேட்பாளர் திடீரென அதிமுகவில் இணைந்தார்!
கோவை: மடத்துக்குளம் தொகுதியில் போட்டியிட்ட பாஜக கூட்டணி வேட்பாளர் பிரசாரத்திற்கு நடுவேயே திடீரென விலகி, அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்து அக்கட்சியில் இணைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக கூட்டணியில் சில சிறு கட்சிகள் இணைந்து போட்டியிடுகின்றன. இதில் அகில இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக்கழகம் கட்சியும் ஒன்றாகும்.
இந்த கட்சியின் நிர்வாகி முத்துக்குமார், திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் தொகுதியில், பாஜக கூட்டணி வேட்பாளராக போட்டியிடுகிறார். இவர்தான், இப்போது திடீரென அதிமுகவுக்கு தாவியுள்ளார்.

தொகுதி ஒதுக்கீடு
வேட்பு மனு தாக்கல், வேட்புமனுவை வாபஸ் பெறும் நாள் எல்லாம் முடிந்துவிட்ட நிலையில், கட்சி தாவி, பாஜகவுக்கு நெருக்கடியை கொடுத்துள்ள முத்துக்குமார் நிருபர்களிடம் கூறியுள்ளதாவது: நான் கோவையில் போட்டியிட வாய்ப்பு கேட்டேன். ஆனால், மடத்துக்குளத்தை பாஜக அளித்தது.

உதவி இல்லை
மடத்துக்குளத்தில் முழு வீச்சில் தேர்தல் பிரசாரத்தில் இறங்கிய நிலையில், நான் சார்ந்துள்ள கட்சியின் சார்பில், தேர்தல் பிரச்சாரத்தில் எனக்கு எவ்வித உதவியும் செய்யவில்லை.

கட்சி விலகல்
பாஜக உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகளை அணுகியபோதும் எவ்வித உதவியும் கிடைக்கவில்லை. அதனால் நான் பொறுப்பு வகிக்கும் அகில இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக்கழகத்தில் இருந்து விலக முடிவு செய்தேன்.

கட்சி தாவல்
அதிமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கை என்னை மிகவும் கவர்ந்தது. எனவே அதிமுகவில் இணைய விரும்பினேன்.
தஞ்சாவூரில் நடைபெற்ற கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா முன்னிலையில் அக்கட்சியில் இணைந்துள்ளேன். இனி மடத்துக்குளம் தொகுதியில் அதிமுக வெற்றிக்காக பாடுபடுவேன்.

அண்ணன் இருக்கும் இரும்பு கோட்டையான..
செவ்வாய்க்கிழமை (இன்று) முதல் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்வேன். இவ்வாறு அவர் கூறினார். இந்த பேட்டியை பார்த்துவிட்டு, "நான் இருக்கின்ற கட்சியில் சரியான பாதுகாப்பு இல்லாததால், அண்ணன் இருக்கும் இரும்புக் கோட்டையான இ.கு.கா கட்சியில் இணைகிறேன்" என்று வடிவேலு சொல்லும் சினிமா காட்சி யாருக்காவது நினைவு வந்தால் அதற்கு கம்பெனி பொறுப்பல்ல.

அதிமுக திட்டம்?
தமிழகத்தின் கொங்கு மண்டலத்தில், பாஜக துரிதமாக வளர்ந்து வருகிறது. அதிமுகவின் வாக்குகளை பாஜக பல இடங்களில் பங்குபோட வாய்ப்புள்ளது. எனவே, மடத்துக்குளத்தில் ஓட்டு சிதறாமல் வெற்றி வாய்ப்பை தக்க வைக்க அதிமுக தரப்பில் முத்துகுமாரை இழுத்திருக்கலாம் என கூறப்படுகிறது.

மாற்ற முடியாது
மடத்துக்குளம் தொகுதியில் உள்ள 271 வாக்குச்சாவடி மையங்களுக்கான வாக்குச்சீட்டுக்கள் அனைத்தும் அச்சடித்து வரப்பெற்றுவிட்டன. அவற்றை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பொருத்தும் பணியும் நடைபெற்று வருகிறது. வேட்பாளர் வாபஸ் பெறுவதற்குரிய காலக்கெடு முடிந்துவிட்டது. எனவே, கட்சி தாவிய வேட்பாளர் பெயர் மற்றும் சின்னம், வாக்குப்பதிவு இயந்திரத்தில் இருக்கத்தான் செய்யும். மக்களாக பார்த்து ரெண்டு ஓட்டு போட்டுவிட்டு போனால் உண்டு.












Click it and Unblock the Notifications