ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்: ஆசிர்வாதம் ஆச்சாரி அல்லது நடிகர் நெப்போலியனை களம் இறக்குகிறது பா.ஜ.க.?
சென்னை: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் முன்னாள் செயலாளர் ஆசிர்வாதம் ஆச்சாரியை பாரதிய ஜனதா களம் இறக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத்தண்டணை பெற்ற ஜெயலலிதா தமிழக முதல்வர் பதவியுடன் தான் வெற்றி பெற்ற ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ. பதவியையும் இழந்தார். இதனால் கடந்த செப்டம்பர் 27-ந்தேதி முதல் ஸ்ரீரங்கம் தொகுதி காலியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இத்தொகுதிக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் பிப்ரவரி 13-ந் தேதி நடைபெற உள்ளது. ஆளும் அ.தி.மு.க.சார்பில் வளர்மதி, தி.மு.க. சார்பில் ஆனந்த் ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அமித்ஷா ஆலோசனை
இத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியும் களம் இறங்குகிறது. சென்னையில் ஆடிட்டர் குருமூர்த்தி இல்ல திருமணத்துக்காக வந்த பாரதிய ஜனதாவின் தேசியத் தலைவர் அமித்ஷா, ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் குறித்தும் ஆலோசனை நடத்தியுள்ளார்.

யார் யாருக்கு வாய்ப்பு?
திருச்சி மாநகர் மாவட்டத் தலைவர் பார்த்தீபன், மாநில துணைத் தலைவர் சுப்பிரமணி ஆகியோர் அல்லது பாரதிய ஜனதாவின் அரசியல் வியூக குழு உறுப்பினரான ஆசிர்வாதம் ஆச்சாரி ஆகியோரில் ஒருவரை களம் இறக்க திட்டமிட்டுள்ளது பாரதிய ஜனதா.

யார் இந்த ஆசிர்வாதம் ஆச்சாரி?
இவர்களில் ஆசிர்வாதம் ஆச்சாரி முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவிடம் உதவியாளராக இருந்தவர். திருச்சியை சேர்ந்த இவர் மத்திய அரசு பணியில் பல ஆண்டுகளுக்கு முன்பு சேர்ந்தார். தகவல் தொடர்பு அமைச்சராக ஆ.ராசா இருந்த போது அவருக்கு சீனியர் பி.ஏ.வாகவும் பணியாற்றினார்.

சு.சுவாமி பகீரத முயற்சி
பின்பு மத்திய ரயில்வே அமைச்சகத்தில் பணியாற்றினார். தற்போது அந்த வேலையையும் ராஜினாமா செய்துவிட்டு சுப்பிரமணியசாமி வழிகாட்டுதலில் பா.ஜ.க.வின் அரசியல் வியூகம் வகுக்கும் குழு உறுப்பினராக உள்ளார். இவரை வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று கடந்த சில மாதங்களாக சுப்பிரமணியன் சுவாமி முயற்சித்து வருகிறார்.

அரசு தரப்பு சாட்சி
இவர் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில் ஆ.ராசா மற்றும் கனிமொழிக்கு ஆகியோருக்கு எதிரான முக்கிய அரசு தரப்பு சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

தி.மு.க.வுக்கு செக்
இவரை நிறுத்துவதன் மூலம் தி.மு.க.வுக்கு செக் வைக்க முடியும் என்பது பாரதிய ஜனதாவின் கணக்கு. ஆனால் ஆசிர்வாதம் ஆச்சாரியை களம் இறக்குவதில் தமிழக பாரதிய ஜனதா தலைவர்களுக்கு விருப்பம் இல்லை என்றும் கூறப்படுகிறது.

நெப்போலியனுக்கு வாய்ப்பு?
இதனிடையே பாரதிய ஜனதாவில் அண்மையில் இணைந்த நடிகர் நெப்போலியனை களம் இறக்குவது தொடர்பாகவும் தமிழக பாரதிய ஜனதா தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. தி.மு.க.வை விட்டு விலகி அண்மையில்தான் பா.ஜ.க.வில் இணைந்தார் நெப்போலியன். அவருக்கு வாய்ப்பளித்தால் தி.மு.க, உள்ளிட்ட கட்சிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள், பாரதிய ஜனதாவுக்குப் போனால் தங்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று நினைத்து கட்சி தாவலாம் என்ற மற்றொரு கணக்கும் பாரதிய ஜனதாவுக்கு இருக்கிறதாம்.
இதுதான் பாரதிய ஜனதாவின் ஹாட் டாபிக்காக இருந்து வருகிறது.












Click it and Unblock the Notifications