விஜய் முதலில் பெரும்பான்மை உடன் வரட்டும்.. ஆளுநர் செய்வது சரி.. பாஜக முழு ஆதரவு!
சென்னை: விஜய் தலைமையிலான தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றும் ஆட்சி அமைக்க முடியாத நிலையில், தமிழக பாஜக-வின் முக்கிய தலைவரும், தலைமை செய்திதொடர்பாளருமான நாராயணன் திருப்பதி, ஆளுநரின் சமீபத்திய முடிவு மாநிலத்தின் நலன் கருதியே எடுக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார். பிடிஐ-க்கு அவர் அளித்த பேட்டியில் "விஜய் பெரும்பான்மை ஆதரவுடன் வரட்டும், நாங்கள் அதை வரவேற்கிறோம்" என்று அவர் கூறியுள்ளார்.
நாராயணன் திருப்பதி, தமிழக ஆளுநர் தமிழ்நாட்டின் நலன் மற்றும் அட்சி நிலைதன்மை கருதி முடிவுகளை எடுத்து வருவதாக வலியுறுத்தினார். ஆளுநர் ஒரு நிலையான அரசை உருவாக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாகவும், இது அவரது அடிப்படைப் பொறுப்பு என்றும் அவர் சுட்டிக்காட்டினார். மக்களின் வாக்குகளை மதித்து, யார் உண்மையான பெரும்பான்மையை நிரூபிக்கிறார்களோ அவர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதே அவரது நிலைப்பாடு என்று விளக்கினார்.

விஜய்க்கு பெரும்பான்மை இல்லை
தற்போதைய சூழலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 113 எம்எல்ஏக்களின் ஆதரவை மட்டுமே பெற்றுள்ளது. இதில் தவெகவின் சொந்த எம்எல்ஏக்களுடன் காங்கிரஸின் 5 எம்எல்ஏக்களின் ஆதரவும் அடங்கும். ஆனால் ஆட்சி அமைக்கத் தேவையான முழு பெரும்பான்மை இல்லை என்று ஆளுநர் தெளிவாகக் கூறியுள்ளார்.
விஜய் தரப்பே தங்களுக்கு 113 ஆதரவு மட்டுமே இருப்பதாகக் கடிதத்தில் தெரிவித்துள்ள நிலையில், மீதமுள்ள ஆதரவை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் கேட்டுள்ளார்.
அரசியல் சட்டம் 164இன் கீழ் ஆளுநருக்கு அதிகாரம்
அரசியல் சாசனத்தின் 164-வது பிரிவின்படி, ஆளுநருக்கு ஒரு கட்சியை ஆட்சி அமைக்க அழைப்பதற்கு முன் அந்த அரசுக்கு உண்மையான பெரும்பான்மை உள்ளதா என்பதை உறுதிப்படுத்தும் உரிமையும் கடமையும் உண்டு.
விஜய் தரப்பு தங்களுக்கு போதுமான ஆதரவு இல்லை என்பதை அவர்களே ஒப்புக்கொண்ட நிலையில், ஆளுநர் அவர்களை ஆட்சி அமைக்க அழைப்பது நிலையற்ற அரசுக்கு வழிவகுக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் விளக்குகின்றனர். எனவே ஆளுநர் சரியான முடிவையே எடுத்துள்ளார் என்பது பாஜக தரப்பின் கருத்து.
1996 திமுக உதாரணம் - ஆதரவுக் கடிதங்கள் அவசியம்
1996-ம் ஆண்டு திமுகவுக்கு 96 இடங்கள் மட்டுமே கிடைத்தபோது, பிற கட்சிகளின் ஆதரவுக் கடிதங்களுடன் சென்றதால் ஆளுநர் அவர்களை ஆட்சி அமைக்க அழைத்தார். அதேபோன்று, தற்போதும் விஜய் தரப்பு முழு ஆதரவை நிரூபித்தால் எந்தப் பிரச்சனையும் இல்லை என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. ஆளுநர் அரசியல் சட்டத்துக்கும் விதிமுறைகளுக்கும் உட்பட்டே செயல்படுகிறார் என்பதை இந்த உதாரணம் உறுதிப்படுத்துகிறது.
மக்களின் விருப்பத்தை மதிக்க வேண்டும்
யார் மக்களின் வாக்குகளின் அடிப்படையில் உண்மையான பெரும்பான்மையை நிரூபிக்கிறார்களோ அவர்களே ஆட்சி அமைக்க வேண்டும் என்பதே சட்டத்தின் அடிப்படை விதி என்று நாராயணன் திருப்பதி வலியுறுத்தினார்.
தமிழக மக்கள் அனைவரும் தமிழர்களே என்பதால், எந்தக் கட்சியோ அல்லது தலைவரோ ஆட்சிக்கு வந்தாலும் மக்கள் விருப்பத்தை மதிக்க வேண்டும் என்றார். ஸ்திரமான அரசு அமைவதே தமிழகத்தின் நலனுக்கு முக்கியம் என்றும் அவர் கூறினார்.
இது தான் சட்டம். இது தான் நாட்டின் அடிப்படை விதி. தனிப்பெரும் கட்சி ஆட்சி அமைக்க உரிமை கோரலாம். ஆனால், ஆளுநரை திருப்திப்படுத்தும் வகையில் உண்மையான பெரும்பான்மை ஆதரவு உள்ளது என்பதை நிரூபிக்க வேண்டும். மேலும், நிலையான அரசை அமைக்க முடியும் என்று உறுதியளிக்க வேண்டும்.
விஜய் ஆகட்டும், வேறு எந்தத் தலைவராகட்டும் - யார் போதுமான ஆதரவுடன் வருகிறார்களோ அவர்களே அரசை அமைத்து நடத்த முடியும்.
சமீப காலங்களில் சில மாநிலங்களில் ஆளுநர்களின் அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் பேச்சுகள் இருந்தாலும், தமிழகத்தில் அத்தகைய சூழல் ஏற்பட வாய்ப்பில்லை என்று தெளிவாகத் தெரிவித்தார் தமிழக பாஜக தலைவரும், தலைமை செய்திதொடர்பாளருமான நாராயணன் திருப்பதி தெரிவித்தார்.














Click it and Unblock the Notifications