தமிழகத்தை முற்றுகையிடும் மத்திய அமைச்சர்கள் ப்ளான் 'பனால்'.. பா.ஜ.க. அதிர்ச்சி
சென்னை: தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியை எப்படியாவது வலுப்படுத்திவிடுவது என்பதற்காக 32 மத்திய அமைச்சர்களை ஒரே நாளில் களமிறக்க திட்டமிட்டிருந்த முயற்சி திடீரென கைவிடப்பட்டுள்ளது. இது தமிழக பா.ஜ.க. தலைவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதா தண்டனை பெற்றதும் எதிர்கட்சிகளை போல் பாரதிய ஜனதாவும் அ.தி.மு.க.வை கடுமையாக விமர்சித்தது. பா.ஜ.க. தலைமையில் ஒரு மாற்று அணி உருவாக்கும் முயற்சி மும்முரமாக மேற்கொள்ளப்பட்டது.

தமிழகத்தில் ஜெயலலிதாவால் ஏற்பட்ட வெற்றிடம் எங்களுக்கே உரியது என்று கனவில் மிதந்தது பாரதிய ஜனதா. அத்துடன் சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் காலூன்றி விடலாம் என்ற கனவுடன் 32 மத்திய அமைச்சர்களை ஒரே நேரத்தில் தமிழகத்தில் களமிறக்கிவிடுவதற்கும் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆனால் சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலையானதும் பிரதமர் மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் வரிசை கட்டிக் கொண்டு வலிந்து வலிந்து ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இதனால் என்னசெய்வது எனத் தெரியாமல் கை பிசைந்து நின்ற தமிழக பா.ஜ.க. தலைவர்களும் டெல்லி மேலிடத் தலைவர்களைவிட மிகவும் விசுவாவசமாக ஜெயலலிதாவுக்கு ஆதரவாக பேசத் தொடங்கினர். அதுவும் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனோ, ஜெயலலிதா முதல்வராக வந்தால் தமிழகம் வளமானதாக மாறும்'' என்று பகிரங்கமாகவே புகழாரம் சூட்டினார்.
இதனால் அண்ணா தி.மு.க.- பாரதிய ஜனதா இடையேயான நெருக்கம் அதிகரித்ததும் உறுதியானது. மேலும் சட்டசபை தேர்தலில் இரு கட்சிகளிடையே கூட்டணி உருவாகும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் மத்திய அமைச்சர்களை அழைத்து வந்து கூட்டம் நடத்தி அ.தி.மு.க.வை விமர்சிப்பதை கட்சி மேலிடம் விரும்பவில்லையாம். இதனால் மத்திஅ அமைச்சர்கள் வருகை திடீரென ரத்து செய்யப்பட்டுவிட்டது.
பாரதிய ஜனதா கட்சியின் மேலிடப் போக்கு திடீர் திடீரென மாறுவதால் அடுத்து அடுத்து என்ன நடக்கும் எனத் தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறது தமிழக பாரதிய ஜனதா.












Click it and Unblock the Notifications