பாமகவின் முடிவு தன்னிச்சையானது, சரியல்ல.. எச்.ராஜா கருத்து
சென்னை: முதல்வர் வேட்பாளரை பாமக அறிவித்திருப்பது தன்னிச்சையான முடிவு. இதுகுறித்து பாஜக மேலிடம் உரிய நடவடிக்கை எடுக்கும் என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கருத்து தெரிவித்துள்ளார்.
சேலம் பொதுக்குழுக் கூட்டத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸை, அடுத்த தேர்தலில் முதல்வர் வேட்பாளராக பாமக அறிவித்துள்ளது. இதனால் பாஜக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அடுத்த தேர்தலில் பாஜக கூட்டணியில் பாமக இடம் பெறாது என்பதும் தெளிவாகி விட்டது.

இதுகுறித்து எச். ராஜா கருத்து தெரிவிக்கையில், ஒரு கூட்டணியில் இருக்கும்போது முதல்வர் வேட்பாளரை எந்தக் கட்சியும் தன்னிச்சையாக அறிவிக்க முடியாது. அனைவரும் சேர்ந்து பேசித்தான் முதல்வர் வேட்பாளரை முடிவு செய்ய முடியும். ஆனால் பாமக ஒரு படி மேலே போய் தன்னிச்சையாக டாக்டர் அன்புமணி ராமதாஸை முதல்வர் வேட்பாளராக அறிவித்துள்ளது.
இரு ஒரு தலைப்பட்சமானது, தன்னிச்சையானது, கூட்டணி கொள்கைக்கு விரோதமானது. இதுகுறித்து பாஜக கவனத்தில் கொண்டுள்ளது. பாஜக மேலிடம் இதுதொடர்பாக உரிய நடவடிக்கையை எடுக்கும் என்றார் ராஜா.
ஏற்கனவே பாஜக கூட்டணியில் பல குழப்பங்கள். தேமுதிக தலைவர் விஜயகாந்த் பாஜகவை படாதபாடு படுத்தி வருகிறார். ஸ்ரீரங்கம் இடைத் தேர்தல் பிரசாரத்திற்கு அவர் வரவும் இல்லை, பாஜக வேட்பாளரை ஆதரிப்பதாக வெளிப்படையாக அறிவிக்கவும் இல்லை. சென்னைக்கு வந்த பாஜக தலைவர் அமீத் ஷாவையும் அவர் சந்திக்கவில்லலை. மேலும் அவரும் முதல்வர் கனவில்தான் இருந்து வருகிறார். கிட்டத்தட்ட விஜயகாந்த்தின் லட்சியமே முதல்வர் பதவியைப் பிடிப்பதுதான்.
இதேபோலத்தான் அன்புமணியை முதல்வர் வேட்பாளராக அக்கட்சியினர் நீண்ட காலமாக கூறி வருகின்றனர். இந்த முரண்பாடுகளுடன்தான் இத்தனை நாட்களாக பாஜக கூட்டணி நீடித்து வருகிறது. ஆனால் தற்போதைய நிலவரங்களைப் பார்த்தால் வரும் பொதுத் தேர்தலில் இக்கூட்டணி நீடிக்காது என்றே தெரிகிறது. ஏற்கனவே பாஜக கூட்டணியை விட்டு வைகோ போய் விட்டார் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications