திருச்சியில் எது பற்றிப் பேசலாம்?.. தமிழக மக்களின் கருத்தைக் கோரும் மோடி!
சென்னை: குஜராத் முதல்வரும், பாஜகவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி தமிழகத்திற்கு வருவதைத் தொடர்ந்து, தமிழகத்தை உலுக்கும் முக்கியப் பிரச்சினைகள் எவை எவை, எதுகுறித்து இந்தக் கூட்டத்தில் பேச வேண்டும் என்பது குறித்து பொதுமக்கள் தங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று பாஜகவின் இணையதளத்தில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் தலையாய பி்ரச்சினைகள் எவை என்பது குறித்து அனைவரும் தத்தமது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் இணையதளம் மூலம் பகிர்ந்து கொள்ளுமாறும் அது கோரியுள்ளது.
மேலும் இதுதொடர்பான கேள்விகள், விளக்கங்கள், விவாதங்களையும் அது வரவேற்றுள்ளது.
திருச்சி வருகிறார் மோடி
நரேந்திர மோடி செப்டம்பர் 26ம் தேதி திருச்சியில் நடைபெறும் இளந்தாமரைக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசவுள்ளார்.
இளைஞர் மாநாடு
இதை பாஜக இளைஞர் மாநாடாக அறிவித்து நடத்துகின்றனர். பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் தமிழகத்தில் மோடி பங்கேற்கும் முதல் கூட்டமாகும் இது.
என்ன பேசலாம்
இந்தக் கூட்டத்தில் எந்தெந்த பிரச்சினைகள் குறித்து மோடி பேச வேண்டும் என்பதை பாஜக மக்களிடம் கேட்டுள்ளது. இதுதொடர்பாக தனதுhttp://volunteer.india272.com/ என்ற இணையதளத்தில் அது ஒரு ஓபன் போரமை ஆரம்பித்துள்ளது.
என்னென்ன பிரச்சினைகள்
இந்த பக்கத்தில், தமிழகத்தை உலுக்கி வரும் பிரச்சினைகள் குறித்த ஒரு மாதிரிப் பட்டியல் இடம் பெற்றுள்ளது. இதேபோல வேறு என்ன பிரச்சினைகள் இந்த திருச்சி மாநாட்டில் விவாதிக்கப்பட வேண்டும் என்றும் அது கருத்துக்களைக் கோரியுள்ளது.
பாஜக தலைவர்களுக்கு எதிரான வன்முறை
பாஜக தலைவர்களுக்கு எதிராக தமிழகத்தில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறை, மின்சார நெருக்கடி, மீனவர் பிரச்சினை, கச்சத்தீவு பிரச்சினை, ஈழத் தமிழர் பிரச்சினை, நதிகளை தேசியமாக்குவது, சேது சமுத்திரத் திட்டம், உள்ளிட்டவை குறித்து அதில் குறிப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
கருத்துக்களைத் தெரிவிக்கலாம்
இந்தப் பிரச்சினைகள் குறித்தும், இதுதொடர்பாக ஆலோசனை கூறியும் கருத்துக்களைத் தெரிவிக்கலாம் என்று அதில் கோரப்பட்டுள்ளது.