அடுத்த ரெய்டு சீசன் தொடங்கியது.. அதிமுகவிற்கு பாஜக வைத்த செக்.. திடுக் பின்னணி!
தமிழக அரசு தற்போது அடுத்த சோதனை வலையில் சிக்கி இருக்கிறது.
சென்னை: தமிழக அரசு தற்போது அடுத்த சோதனை வலையில் சிக்கி இருக்கிறது. இந்த முறை, சிபிஐ தமிழக அரசு அதிகாரிகள் வீடுகளிலும், அமைச்சர்கள் வீடுகளிலும் சோதனை நடத்தி உள்ளனர்.
நேற்று தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், தூத்துக்குடி, இதேபோல பாண்டிச்சேரி கர்நாடக மாநிலம் பெங்களூரு, மகாராஷ்டிராவின் மும்பை உள்ளிட்ட 35 இடங்களில் சோதனை நடந்தது. சிபிஐ அதிகாரிகள் 450 பேர் இதில் ஈடுபட்டார்கள்.
அதன்படி அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், சென்னை முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சம்பத் உள்ளிட்ட பெரும்புள்ளிகளின் வீடுகளில் சோதனை நடந்தது.

இதற்கு முன்பு நடந்த ரெய்டுகள்
இதற்கு முன்பே தமிழகத்தில் பெரிய பெரிய சோதனைகள் நடந்துள்ளது. சேகர் ரெட்டி சோதனை, சசிகலா உறவினர் வீடுகளில் சோதனை, கிறிஸ்டி நிறுவன சோதனை, சாலை ஒப்பந்ததாரர் வீடுகளில் சோதனை ஆகிய சோதனைகள் தமிழகத்தை உலுக்கியது. இந்த நிலையில்தான் தற்போது குட்கா சோதனை நடந்துள்ளது.

இதில் என்ன வித்தியாசம்
ஆனால் இந்த குட்கா சோதனை கொஞ்சம் வித்தியாசமானது. ஏனென்றால், இந்த சோதனை வருமான வரித்துறையால் நடத்தப்படவில்லை. சிபிஐயின் தனிப்பிரிவு இந்த சோதனையை நடத்தி இருக்கிறார்கள். இதனால், இந்த சோதனையில் சிக்கிய நபர்கள் கைது செய்யப்பட வேண்டியது அவசியம். இதனால் சில முக்கிய தமிழக புள்ளிகள் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது.

கட்டுப்பாட்டில் உள்ளனர்
ஏற்கனவே சேகர் ரெட்டி சோதனை, கிறிஸ்டி சோதனை, சாலை ஒப்பந்ததாரர் சோதனை எல்லாவற்றிலும் எப்படியோ தமிழக அரசை சேர்ந்த அமைச்சர்களும் சிக்கி உள்ளனர். முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் ஆகியோர்களுக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில்தான் இந்த சோதனை எல்லாம் நடந்தது. இதனால் மத்திய அரசு அதிமுகவை முழு கட்டுப்பாட்டில் வைத்து இருப்பதாக ஏற்கனவே குற்றச்சாட்டு எழுந்து இருந்தது.

இன்னும் அதிகம்
தற்போது இந்த கட்டுப்பாடு இன்னும் அதிகம் ஆகியுள்ளது என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள். ஆளும் அதிமுக தரப்பு மீது பாஜக அதிர்ச்சியில் இருப்பதாகவும், அதன் காரணமாகவே இந்த தொடர் ரெய்டுகள் நடப்பதாகவும் கூறப்படுகிறது. போலீஸ் ஆணையர் வீட்டிலேயே சோதனை செய்ததன் மூலம், விரைவில் ஆட்சி கலைப்பு நடவடிக்கையை கூட ஆளுநர் மூலம் மத்திய அரசு எடுக்க வாய்ப்புள்ளது என்றும் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

தீர்ப்பு வருகிறது
இதற்கு முக்கியமான காரணம் ஒன்று கூறப்படுகிறது. இன்னும் இரண்டு மாதத்தில் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. அதில் தினகரன் தரப்பிற்கு ஆதரவாக தீர்ப்பு வர வாய்ப்புள்ளதாக நீதித்துறை வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். அப்படி நடக்கும் பட்சத்தில், அதிமுக அரசு தினகரன் வசம் செல்ல வாய்ப்புள்ளது. இதை விரும்பாத மத்திய அரசு அதிமுகவை கட்டுப்பாட்டில் வைக்க இப்படி செய்வதாக தினகரனுக்கு நெருக்கமானவர்கள் சிலர் தெரிவிக்கிறார்கள்.

தினகரன் பக்கம் சேர்கிறார்கள்
அதேபோல் தினகரன் தரப்பு பக்கம் இப்போதே கொஞ்ச கொஞ்சமாக அதிமுக தரப்பு நகர்ந்து வருகிறது. துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மட்டுமே தினகரனுக்கு எதிராக பேசி வருகிறார்கள். மற்ற உறுப்பினர்கள் தினகரனுக்கு மறைமுக கிரீன் சிக்னல் கொடுத்து வருகிறார்களாம். இதை விரும்பாத மத்திய அரசு மீண்டும் ரெய்டு சீசனை ஆரம்பித்துள்ளது என்று கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications