கூட்டணி அமையாவிட்டால் 234 தொகுதிகளிலும் பாஜக தனித்துப் போட்டியிட தயார்: தமிழிசை அறிவிப்பு
நெய்வேலி: கூட்டணி அமையாவிட்டால் 234 தொகுதிகளிலும் பாஜக தனித்து போட்டியிட தயாராக இருப்பதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் தேமுதிகவுடன் எப்படியாவது கூட்டணி வைத்து விட வேண்டும் என்று பாஜக துடித்தது. தூது மேல் தூது விட்டும், நேரில் சந்தித்து பேசியும், கெஞ்சியும் விஜயகாந்த் மசியவில்லை.
இதையடுத்து அதிமுகவுடன் கூட்டணி வைக்கலாமா இல்லை தனியாக தேர்தலை சந்திக்கலாமா என்ற யோசனையில் உள்ளது பாஜக. இந்நிலையில் இது குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நெய்வேலியில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

தனித்து போட்டி
மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் எங்கள் கட்சியின் கூட்டணியில் உள்ள தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். கூட்டணி அமையாவிட்டால் 234
தொகுதிகளிலும் தனித்து போட்டியிட பாஜக தயாராக உள்ளது.

மக்கள் நலக் கூட்டணி
தமிழகத்தில் ஏற்கனவே 2 கூட்டணி அமைந்துள்ளது. அதில் மக்கள் நலக் கூட்டணியால் மக்களுக்கு ஒரு பலனும் இல்லை. திமுக-காங்கிரஸ் கூட்டணியை மக்களை ஏற்கனவே நிராகரித்துள்ளனர். பாஜக தலைமையில் அமையும் கூட்டணியால் தமிழகம் வளமாவதுடன், ஊழல் இல்லா மாநிலம் ஆகும்.

தமிழக அரசு
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தமிழக அரசு அவசர அவசரமாக பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதில் மது விலக்கு குறித்த அறிவிப்பு இல்லாதது ஏமாற்றத்தை அளிக்கிறது.

சிதம்பரம்
முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி மீது பல ஊழல் வழக்குகள் உள்ளன. பாஜக ஆட்சிக்கு வந்தால் ஊழலற்ற ஆட்சியை அளிக்கும்.

7 பேர்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான 7 பேரை விடுவிக்க வேண்டும் என தமிழக அரசு சட்ட திட்டங்களுக்கு உட்படாமல் தேர்தல் நேரத்தில் தமிழக மக்களின் உணர்ச்சியை தனக்கு சாதமாக்கிக் கொள்ளும் வகையில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications