டெங்கு குறைந்து விட்டதாக பொய் சொல்கிறது மாநகராட்சி.. சென்னையில் தமிழிசை ஆர்ப்பாட்டம்
சென்னை: உரிய நடவடிக்கைகள் எடுக்காமல் டெங்கு காய்ச்சல் குறைந்துள்ளதாக கூறி மக்களை ஏமாற்றுவதாக சென்னை மாநகராட்சியை முற்றுகையிட்டு தமிழிசை தலைமையில் பாஜகவினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் டெங்கு பாதிப்பும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், சென்னையில் டெங்கு காயச்சல் பரவுவதைத் தடுக்க தவறியதாக சென்னை மாநாகராட்சியை முற்றுகையிட்டு பாஜகவினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தராஜன் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்கள் மத்தியில் தமிழிசை பேசுகையில்,
உயிரோடு விளையாடும் அரசு...
சென்னை மக்கள் காப்பாற்றப்பட வேண்டும். தமிழக மக்களின் உயிரோடு விளையாடிக்கொண்டிருக்கும் மாநகராட்சி தங்களின் நடவடிக்கையை துரிதப்படுத்தி நிச்சயமாக தமிழக மக்களுக்கு ஆரோக்கியத்தை தர வேண்டும் என்பதை மிக வலிமையாக நாங்கள் வலியுறுத்துகிறோம்.
ஏமாற்று வேலை...
டெங்கு காய்ச்சல் குறைந்திருக்கிறது குறைந்திருக்கிறது என்று மக்கள் மாநகராட்சியினால் ஏமாற்றப்படுகிறார்கள். மிக மிக மோசமான நிலையில் தமிழகம் இன்று இருந்துக்கொண்டிருக்கிறது.
பருவ மழையா... பரிதவிக்க வைக்கும் மழையா
பருவ மழையா இல்லை சென்னை மக்களை பரிதவிக்க வைக்கும் மழையா என்ற நிலையில், அரை மணி நேரம் மழை பெய்தால் கூட இந்த சாலைகளில் காரில் போக முடியாது, படகில்தான் போக வேண்டும்.
கழுத்தளவு தண்ணீர்...
படகில் கூட போக முடியாது கப்பலில்தான் போக வேண்டும். குழந்தைகள் கழுத்தளவு நீரில் மிதந்து சென்றுகொண்டிருக்கிறார்கள். பெரியவர்கள் எல்லாம் முட்டியளவு தண்ணீரில் நடந்து கொண்டிருக்கிறார்கள். என்ன அவலம் இது.
கட்டுக்கடங்கவில்லை டெங்கு...
15 மண்டலங்களாக பிரித்துவிட்டார்களாம். இதில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணி செய்து கொண்டிருக்கிறார்களாம். டெங்கு காய்ச்சல் கட்டுக்கடங்காமல் இருந்து கொண்டிருக்கிறது.
மருத்துவர்கள் தகவல்...
தனியார் மருத்துவமனை மருத்துவர்களிடம் பேசும்போது, ஒரு நாளைக்கு 3 அல்லது 4 டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டவரை பார்ப்பதாக கூறுகிறார்கள். ஆனால் சென்னை மாநகராட்சி இதனை மறுக்கிறது' என்றார்.
கைது...
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, திடீரென போலீசாருக்கும், பாஜகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழிசை உள்பட பாஜகவினரைப் போலீசார் கைது செய்தனர்.