ஆர்கேநகர்: தலைதெறிக்க தப்பி ஓடும் பாஜக பிரமுகர்கள்- மீண்டும் மதுசூதனன், மருது கணேஷ், தினகரன் போட்டி?
ஆர்கே நகர் இடைத் தேர்தலில் போட்டியிட வைத்துவிடுவார்களோ என அஞ்சி பாஜக பிரமுகர்கள் தப்பி ஓடுவதாக கூறப்படுகிறது.
Recommended Video

சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான தேதி இன்று அறிவிக்கப்பட இருக்கிறது. இத்தேர்தலில் போட்டியிட விரும்பாமல் பாஜக பிரமுகர்கள் பலரும் தலைதெறிக்க தப்பி ஓடுவதாக கூறப்படுகிறது.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து ஓராண்டு காலமாக ஆர்.கே.நகர் தொகுதிக்கான தேர்தல் நடைபெறாமல் உள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட போது பணப்பட்டுவாடா புகாரால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
தற்போது டிசம்பர் 31-க்குள் தேர்தலை நடத்தி முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து டெல்லியில் ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத் தேர்தல் தேதியை தேர்தல் தேதி இன்று அறிவிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திமுக மருதுகணேஷ்
திமுகவைப் பொறுத்தவரையில் மீண்டும் உள்ளூர் வேட்பாளர் மருது கணேஷ் நிறுத்தப்படலாம். அதேபோல் அதிமுக (அம்மா) கட்சி சார்பாக தினகரன் போட்டியிடப் போவதாக அறிவித்திருக்கிறார்.

ஜெயக்குமார் மீது அதிருப்தி
அதிமுக(ஈபிஎஸ்-ஓபிஎஸ்) அணியில் மதுசூதனனே போட்டியிட விரும்புகிறார். ஆனால் ஜெயக்குமார் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். தற்போது சீனா எஞ்சின் படகுகள் விவகாரத்தில் ஜெயக்குமார் மீது தொகுதி மக்கள் கடும் அதிருப்தி இருப்பதால் மதுசூதனனுக்கே அதிக வாய்ப்புள்ளது.

போட்டியிடுவார் தீபா?
ஆர்கே நகரில் போட்டியிட்டு வெல்வேன் என அடம்பிடித்துக் கொண்டிருக்கிறார் தீபா. இவர்கள் அல்லாமல் பாஜக சார்பில் யார் போட்டியிடப் போகிறார்கள்? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

மக்கள் தேடும் பாஜக வேட்பாளர்
பாஜக வேட்பாளராக கடந்த முறை கங்கை அமரன் போட்டியிட்டார். கடந்த ஓராண்டில் பாஜக, தமிழக மக்களின் பொறுமையை எல்லை கடந்து சோதித்துவிட்டது. அந்த கட்சி மீது காட்ட முடியாத கடுங்கோபத்தில் தமிழக மக்கள் உள்ளனர். இதனை புரிந்து கொண்டிருக்கும் பாஜக பிரமுகர்கள் கட்சி தலைமையின் கண்ணில்படாமலேயே தப்பி ஓடி தலைமறைவாகவே உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது பாஜக தலைமையை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறதாம்.












Click it and Unblock the Notifications