இலங்கை தமிழர், தமிழக மீனவர் பிரச்சினை பற்றி பாஜக. துணை தேர்தல் அறிக்கை வெளியிடுமாம்...
சென்னை: தேர்தல் அறிக்கையில் விட்டுப் போன இலங்கை தமிழர் மற்றும் தமிழக மீனவர் பிரச்சினை குறித்து பாஜக. துணை தேர்தல் அறிக்கை வெளியிடும் என தான் நம்புவதாக தெரிவித்துள்ளார் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும், தென்சென்னை தொகுதி பாஜக வேட்பாளருமான இல.கணேசன்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது பாஜக. அது தொடர்பாக நேற்று சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார் பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினரும், தென்சென்னை தொகுதி பா.ஜ.க. வேட்பாளருமான இல.கணேசன்.
அப்போது, பாஜக கொள்கை பரப்பு செயலாளரும், நடிகருமான எஸ்.வி.சேகர், மாநில செயலாளர் கே.டி.ராகவன், அலுவலக செயலாளர் சர்வோத்தமன், இந்திய ஜனநாயக கட்சியின் தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் ஆரூர் சுந்தரம் ஆகியோர் உடன் இருந்தனர்.
அப்போது இல.கணேசன் கூறியதாவது:-

நிபுணர்கள் பாராட்டு...
பா.ஜ.க. தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு, பொருளாதார, அரசியல் நிபுணர்கள் மிகுந்த மகிழ்ச்சியும், பாராட்டும் தெரிவித்துள்ளனர். அமைய இருக்கும் நரேந்திரமோடி ஆட்சி எப்படி இருக்கும் என்பதை தேர்தல் அறிக்கை தெளிவாக்கியுள்ளது.

பல்வேறு நலத்திட்டங்கள்....
பா.ஜ.க. என்றவுடன் சிலர் சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி என்கிறார்கள். ஆனால், பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் சிறுபான்மையினர் நலனுக்கான பல்வேறு திட்டங்கள் இடம்பெற்றுள்ளன' என்றார்.

அரசியல் சாசனம்...
அதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களின் கேள்விக்கு இல.கணேசன் அளித்த பதில்களாவது...
கேள்வி:-பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் ராமர் கோவில் கட்டப்படும் என்று கூறப்பட்டுள்ளதே?.
பதில்:-அரசியல் சாசனத்திற்கு உட்பட்டே ராமர் கோவில் கட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

துணை தேர்தல் அறிக்கை வரலாம்....
கேள்வி:-இலங்கை தமிழர் பிரச்சினை, தமிழக மீனவர் பிரச்சினை குறித்து பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் எதுவும் தெரிவிக்கப்படவில்லையே?.
பதில்:-இலங்கை தமிழர் பிரச்சினை மட்டும் அல்ல, வெளியுறவுத்துறை பற்றியும் அதில் எதுவும் கூறப்படவில்லை. எனவே, இதன்மீது தனி கவனம் செலுத்தி துணை தேர்தல் அறிக்கை ஒன்று வெளியிடப்படும் என்று நம்புகிறேன்.

துரதிர்ஷ்டவசமானது...
கேள்வி:-நீலகிரி தொகுதி பா.ஜ.க. வேட்பாளரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதே?.
பதில்:-இது துரதிர்ஷ்டவசமானது. எங்கள் கட்சியை சேர்ந்த அவர் தவறு செய்திருக்கலாம். ஆனால் துரோகம் செய்திருக்கமாட்டார்.

யோசிக்க வேண்டும்....
கேள்வி:- நீலகிரியில் பா.ஜ.க. வேட்பாளரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டால், யாருக்கு நீங்கள் ஆதரவு கொடுப்பீர்கள்?.
பதில்:- இனிமேல்தான் யோசிப்போம்.

சிதம்பரம் கருத்து....
கேள்வி:-தேர்தலுக்கு பிறகு பா.ஜ.க.வுக்கு அ.தி.மு.க. ஆதரவு அளிக்கும் என்று மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறிவருகிறாரே?.
பதில்:-அது தவறு. தற்போது வெளியாகியுள்ள கருத்து கணிப்புப்படி, பா.ஜ.க.வுக்கு 272 தொகுதிகளுக்கு மேலும், பா.ஜ.க. கூட்டணிக்கு 300-க்கும் மேற்பட்ட இடங்கள் கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. எனவே, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தேர்தலுக்கு பிறகு பிற கட்சிகளிடம் ஆதரவு கேட்கும் நிலை வராது. அதே நேரத்தில், காங்கிரஸ்-தி.மு.க. வேண்டுமானால் தேர்தலுக்கு பிறகு சேரும் வாய்ப்பு உள்ளது.

மதவாத கட்சியா?
கேள்வி:-பா.ஜ.க. மதவாத கட்சி என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறிவருகிறாரே?.
பதில்:-அவர் எங்களோடு கூட்டணி வைத்தபோது நாங்கள் மதவாத கட்சி இல்லை. இப்போது கூட்டணியில் அவர்கள் இல்லை என்றால், நாங்கள் மதவாத கட்சியா?. அவர் கூறுவதை எல்லாம் மக்கள் ஏற்கமாட்டார்கள்' என இவ்வாறு இல.கணேசன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications