தமிழகத்தில் பாஜக போட்டியிலேயே இல்லை... தொல். திருமாவளவன் கருத்து
சென்னை: தமிழகத்தில் பாஜக போட்டியிலேயே இல்லை என்பதை ஸ்ரீரங்கம் தேர்தல் முடிவு காட்டியுள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
சிங்கள அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா அதிபராக தேர்வு செய்யப்பட்ட பிறகு முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியா வந்திருக்கிறார் என்ற போதிலும், அது இந்திய-இலங்கை உறவை மேம்படுத்துவதற்காக அல்ல. மார்ச் மாதம் நடைபெற உள்ள ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் நடைபெற உள்ள இலங்கையின் போர்க்குற்ற விசாரணையை தள்ளிப்போடுவதற்கு ஆதரவு திரட்டுவதற்காகவே இந்தியா வருகிறார். இன்னும் சில மாதங்களில் இலங்கையில் எம்.பி. தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்னதாக இந்த விசாரணை நடைபெற்றால் சிங்களர்களுக்கு எதிரான நிலை உருவாகி விடும் என்பதற்காகவே போர்க்குற்ற விசாரணையை தள்ளிப்போட விரும்புகிறார்.

அதே நேரத்தில், வடகிழக்கு மாகாண பகுதிகளில் ராணுவ முகாம்களை அகற்றுவதாக தமிழ் தலைவர்களிடமும், அகற்றுவதில்லை என சிங்களர்களிடமும் கூறி, சிறிசேனா தனது இரட்டை நிலையை காட்டி வருகிறார். எனவே, இலங்கையின் வடக்கு மாகாண சபை நிறைவேற்றி உள்ள தீர்மானத்தை, ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்க இந்தியா வலியுறுத்த வேண்டும். அதற்காக மத்திய அரசை, தமிழக அரசு மற்றும் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் வலியுறுத்த வேண்டும். மேலும், இலங்கையின் வடக்கு மாகாண சபையின் தீர்மானத்தை வரவேற்று தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
டெல்லி தேர்தலில், மோடியா? கெஜ்ரிவாலா? என்பது போன்ற ஒரு நிலை இருந்தது. ஆனால், ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் பா.ஜ.க. பெற்றுள்ள வாக்குகளை பார்க்கும் போது, தமிழகத்தில் பா.ஜ.க. போட்டியிலேயே இல்லை என்பதைத்தான் இந்த தேர்தல் முடிவு காட்டுகிறது என்றார்.












Click it and Unblock the Notifications