தேர்தல் விதிகளை மீறி பக்தர்களுக்கு நீர் மோர், அன்னதானம் வழங்கிய பாஜக.. புது சர்ச்சை!
சென்னை: சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் அறுபத்து மூவர் திருவிழாவின்போது பக்தர்களுக்கு நீர் மோர், அன்னதானம் வழங்கினார் பாஜகவைச் சேர்ந்த வானதி சீனிவாசன். இது தேர்தல் விதி மீறல் என்று தற்போது சர்ச்சை வெடித்துள்ளது.
சென்னை மயிலாப்பூர் கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி பெருவிழா கடந்த 6ம் தேதி கிராம தேவதை பூஜை கோலவிழியம்மன் சிறப்பு வழிபாடுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து 7ம் தேதி கெடியேற்றமும், 8ம் தேதி சூரிய வட்டம், சந்திரவட்டமும், 9ம் தேதி அதிகார நந்தி காட்சியளித்தலும், 10ம் தேதி புருஷாமிருகம், சிங்கம், புலி வாகனமும், 11ம் தேதி சவுடல் விமானமும், 12ம் தேதி பல்லக்கு விழாவும் நடந்தது. ஒவ்வொரு நாளும் ஐந்திருமேனிகள் திருவீதி உலா நடந்தது.

இதையடுத்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று காலை நடந்தது. தேரோட்டத்தையொட்டி கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் காலை 8 மணிக்கு திருத்தேரில் எழுந்தருளினார்.
சர்வ அலங்காரத்தில் இருந்த சுவாமிக்கு சிறப்பு அர்ச்சனைகள் நடைபெற்றன. தொடர்ந்து காலை 9 மணிக்கு தேர் வடம் பிடித்தல் நடந்தது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான அறுபத்து மூவர் திருவிழா நாளை நடைபெறுகிறது. வெள்ளி விமானத்தில் இறைவன் அறுபத்து மூவர் நாயன்மார்களோடு காட்சி அளிக்கிறார்.
இந்த நிலையில் இன்று தேர்த் திருவிழாவுக்கு வந்த பக்தர்களுக்கு வானதி சீனிவாசன் தலைமையில் பாஜகவினர் நீர் மோர், அன்னதானம் ஆகியவற்றை வழங்கினர். மேலும் அவர்கள் போட்டிருந்த ஸ்டாலில் பாஜகவின் தேர்தல் சின்னத்தோடு நரேந்திர மோடி, இல. கணேசன், பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோரின் படங்களும் இடம் பெற்றிருந்தது.
இது தேர்தல் விதிமீறல் என்று மற்ற கட்சியினர் ஆட்சேபனை தெரிவித்துள்ளன. மத வழிபாட்டுத் தலங்களையும், பக்தர்களையும் அரசியல் லாபத்திற்காகப் பயன்படுத்தக் கூடாது என்று தேர்தல் விதிமுறைகள் கூறுவதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.












Click it and Unblock the Notifications