தமிழகத் தேர் பற்றி எரியாமல் இருக்க ஆர்எஸ்எஸ், பாஜக என்கிற கண்ணன்கள் தேவை - தமிழிசை
தமிழகத் தேர் பற்றி எரியாமல் இருக்க பா.ஜ.க, ஆர்எஸ்எஸ் என்கிற கண்ணன்கள் தேவை என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
திருச்சி: தமிழக பாஜகவால் பயிற்சி மையம் நடத்துவதன் மூலம் அனிதாக்கள் மரணம் தடுக்கப்படும். இனிமேல் மாணவர்களை போராட தூண்டினால் பாஜக எதிர்கொள்ளும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
திருச்சியில் திமுக நடத்திய நீட் கண்டன பொதுக்கூட்டத்திற்கு பதிலடியாக அதே இடத்தில் பாஜக கூட்டம் நடைபெற்றது. ஆட்கள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. வெறும் நாற்காலிகளைப் பார்த்து சவால் விட்டு பேசினார் தமிழிசை சவுந்தரராஜன்.
24 மணி நேரத்தில் எங்களாலும் கூட்டத்தை கூட்ட முடியும் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஜார்ஜ் கோட்டைக்கு எங்களாலும் செல்ல முடியும் என்று கூறினார்.
குறை சொல்வதா?
மத்திய ஆட்சியை எதற்கெடுத்தாலும் குறை கூறுகிறார்கள். தாமரை நிச்சயம் மலரும். தமிழ் ஆட்சி மொழி ஆக்கப்படும் என்பதை பாஜக கூட்டத்தில் அறிவிக்கிறேன். அனிதாக்களை காப்பாற்ற தான் நீட் தேர்வு.
நீட் பயிற்சி மையம்
தமிழக பாஜகவால் பயிற்சி மையம் நடத்துவதன் மூலம் அனிதாக்கள் மரணம் தடுக்கப்படும். இனிமேல் மாணவர்களை போராட தூண்டினால் பாஜக எதிர்கொள்ளும். அனிதாவின் மரணத்தில் அரசியல் உள்ளது.
காவிகள் ஆளும்
இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்ட போது என்ன செய்தீர்கள் ஸ்டாலின். திமுகவைத் தமிழகத்தில் அப்புறப்படுத்த அழைக்கிற கூட்டம் பாஜகவின் கூட்டம். பாவிகள் ஆண்ட தமிழகத்தை காவிகள் ஆளும்.
ஸ்டாலின் கேள்விக்கு பதில்
ஸ்டாலின் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த தமிழிசை, தமிழக மசோதாக்கள் எங்கே. அதை என்ன செய்தோம் என்பதை நட்டா சொல்லியிருக்கிறார்.காரணம் ஒரு ஆண்டிற்கு மட்டும்தான் விலக்கு எனச் சொன்னாரே.? மாட்டு இறைச்சிக்கு அவசரச் சட்டம் அல்ல அது ஒரு திருத்தம்.
தர்மயுத்தம்
மீனவர்கள் பிரச்னையில் கச்சத் தீவை தாரை வார்த்த கட்சி திமுக 18 ஆண்டு இருந்து விட்டு கச்சத் தீவை மீட்டிருக்கலாமே. தமிழகத் தேர் பற்றி எரியாமல் இருக்க பாஜக, ஆர்எஸ்எஸ் என்கிற கண்ணன்கள் தேவை. இது தர்மயுத்தம். 13ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துங்கள் என்றார்.
குடும்ப அரசியல்
ஸ்டாலின் அவர்களே, உங்கள் கட்சியில் குடும்ப அரசியல் தவிர்த்த ஒருவரை வாரிசு அரசியலற்ற ஒரு தலைவரை திமுகவில் காட்ட முடியுமா என்றும் கேட்டார் தமிழிசை. தமிழிசை பேசியதை கேட்க மக்கள் கூட்டத்தை விட காலி சேர்களை அதிகம் இருந்தன.