ஜெயலலிதா நலம் பெற கேதார்நாத் கோவிலில் பூஜை... புனித நீர் கொண்டு வந்த தருண் விஜய்
முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் பெற வேண்டி ராஜ்யசபா முன்னாள் பாஜக எம்.பி., தருண் விஜய் கேதார்நாத் ஆலயத்தில் சிறப்பு பூஜை நடத்தியுள்ளார்
சென்னை: சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் முதல்வர் ஜெயலலிதா உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். கடந்த 48 நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார் முதல்வர் ஜெயலலிதா.
முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டி, தமிழகம் முழுவதும் ஆலயங்கள், மசூதிகள், சர்ச்சுகளில் பிரார்த்தனைகள் நடைபெற்று வருகின்றன.
ஜெயலலிதா நலம் பெற வேண்டி உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனைச் சேர்ந்த பாஜக முன்னாள் எம்.பி. தருண் விஜய், ஹரித்துவார், கங்கா கோவில் மற்றும் கேதர்நாத் கோவில்களில் சிறப்பு பூஜை நடத்தியுள்ளார்.
தருண் விஜய் பூஜை
திருவள்ளுவரின் புகழ் நாடு முழுவதும் பரவுவதற்கு முதல்வர் ஜெயலலிதாவின் உதவி பேருதவியாக இருந்தது. அவரது உதவி மூலம் எங்களுக்கு அங்கீகாரமும் கிடைத்தது. இந்தநிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் குணமடைந்து நல்ல ஆரோக்கியத்துடன் வீடு திரும்ப வேண்டும் என்று விரும்புகிறோம். இதற்காக ஹரித்துவார் கங்கா கோவில் மற்றும் கேதர்நாத் கேதாரீஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன என்று சில தினங்களுக்கு முன்பு கூறியிருந்தார்.
நேரில் நலம் விசாரித்த தருண் விஜய்
இந்நிலையில்,முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து நேரில் கேட்டறிய அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தார் தருண் விஜய் மருத்துவமனையில் நாடாளுமன்ற மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் டாக்டர்களையும் சந்தித்து முதல்வர் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.
பிரசாதம், புனித நீர்
அப்போது, முதல்வர் ஜெயலலிதா பூரண நலம்பெற வேண்டி, கேதார்நாத் கோயிலில் பூஜை செய்யப்பட்ட பிரசாதம் மற்றும் மானசரோவர் ஏரியில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் ஆகியவற்றை முதல்வரிடம் வழங்குமாறு தம்பிதுரையிடம் அளித்தார் தருண் விஜய்.
விரைவில் பணிக்கு திரும்புவார்
செய்தியாளர்களிடம் பேசிய தருண் விஜய், முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் பூரண குணம்பெற்று விரைவில் பணிக்குத் திரும்புவார். முதல்வர் நலம்பெற வேண்டி உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கோயில்களில் சிறப்பு பூஜைகளும் பிரார்த்தனைகளும் நடைபெற்று வருகின்றன. முதல்வர் பூரண குணமடைந்து வீடு திரும்பியதும் அவரை கேதார்நாத் கோயிலுக்கு வரும்படி அழைப்பு விடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.