அதிமுக, தேமுதிக.. எதுவும் தேறாததால் 'புது கூட்டணி' தேடும் பாஜக
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தல் நெருங்கி வருகின்ற நிலையில் ஒருபுறம் அதிமுகவும் மறுபுறம் தாங்கள் பெரிதும் எதிர்பார்த்த தேமுதிகவும் தங்களை கை கழுவும் சூழல் உருவாகியுளளதால் தமிழகத்தில் தனித்து விடப்பட்டுள்ள பாஜக கூட்டணிக்காக கட்சிகளைத் தேடி அலைந்து வருகின்றது.
திமுகவுடன் தேமுதிக பேச்சை முடித்து விட்டது என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதை வெளிப்படுத்தும் விதமாக தி.மு.க தலைவர் கருணாநிதி, தங்கள் கூட்டணிக்கு விஜயகாந்த் வருவார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் விஜயகாந்துடன் கூட்டணி பேசி வந்த பா.ஜ.க திடீரென மேலும் ''வலுவான கூட்டணி அமைக்க முயற்சி மேற்கொள்ளப்படும்'' என்று புதிய டோனில் பேச ஆரம்பித்துள்ளது.
அ.தி.மு.கவோ தனது கூட்டணியில் பா.ஜ.கவுக்கு இடம் தர வாய்ப்பிலை என்பதை தெளிவுபடுத்தும் வகையில் கட்சி நிகழ்ச்சிகளில் சிறுபான்மை சமூகத்தினருக்கு திடீரென முக்கியத்துவம் தர ஆரம்பித்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா.
லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க உடன் கூட்டணி அமைக்க பா.ஜ.க முயற்சி செய்தது. ஆனால், பா.ஜ.க கூட்டணியில் இணைந்தால் சிறுபான்மையின மக்களின் ஓட்டுகளை இழக்க நேரிடும் என அ.தி.மு.க கருதியது. எனவே பா.ஜ.க உட்பட எந்த கட்சிகளையும் கூட்டணியில் சேர்க்காமல் அ.தி.மு.க தனித்து களம் இறங்கியது.
ஆனால், சட்டசபை தேர்தலில் தனித்து போட்டி என அ.தி.மு.கஅறிவிக்கவில்லை. தி.மு.க-காங்கிரஸ் கூட்டணியில் தேமுதிக இணைந்துவிட்டால் அது வலுவான கூட்டணியாக அமைந்து தனித்து போட்டியிட்டால் சறுக்கலை சந்திக்க நேரிடும் என்பதால் தனித்து போட்டி என அறிவிக்காமல் உள்ளார் ஜெயலலிதா.
அதே நேரம் தி.மு.க கூட்டணியில் தேமுதிக சேராவிட்டால் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளார் ஜெயலலிதா.
இதனால் தமிழகத்தில் தனித்து விடப்படும் நிலையில் இருக்கும் பாஜக கூட்டணிக்காக கட்சிகளை தேடி வருகிறது.