ரஜினியுடன் ஒட்டும் வேண்டாம்.. உறவும் வேண்டாம்.. பாஜக முடிவெடுக்க ராமசுப்ரமணியன் அழைப்பு!
காலா படத்தின் மூலம் பாஜகவை ரஜினி சீண்டமாட்டார்; அவருடன் ஒட்டும் வேண்டாம்- உறவும் வேண்டாம் என்கிற முடிவில் அக்கட்சியினர் இருப்பதாக கூறுகிறார் டாக்டர் ராமசுப்பிரமணியன்.
Recommended Video

-டாக்டர் ந. ராமசுப்ரமணியன், அரசியல் விமர்சகர்
ரஜினிகாந்தின் அரசியல் அறிவிப்பு, பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு கலக்கமும், தமிழக பாஜகவுக்குத் தெம்பும் அளித்தது. எல்லா மதங்களையும் ஒன்றாக பாவித்தாலும், இந்துக்களின் நலனுக்காக குரல் கொடுக்கும் ஒரே அரசியல் கட்சி பாரதீய ஜனதா கட்சி மட்டுமே என்று அழுத்தமாகக் கூற இயலும்.
ரஜினியின் "ஆன்மீக அரசியல்'' எனும் பேச்சு, தொய்வு நிலையிலுள்ள தமிழக பாரதீய ஜனதாக் கட்சிக்கு "நமக்குத் துணை ரஜினி'' என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது. ஆகவே மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், ஹெச். ராஜா மற்றும் தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் உட்பட பல தலைவர்களும் ரஜினிகாந்தின் "ஆன்மீக அரசியல்'' எனும் பேச்சினை ரசித்தனர்.

அவர் அரசியல் வருகையை வரவேற்றனர். "கட்சி தொடங்குவதற்கு முன்பாகவே தமிழக வாக்காளர்களில் 20% பேர் ரஜினிக்கு ஓட்டளிக்கத் தயாராக உள்ளனர், அவர் களத்தில் இறங்கி வேலை செய்ய ஆரம்பித்தால் நமது நிலை என்ன ஆகும்'' என்ற அச்சத்தில் பெரிய கட்சிகளான திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவை கூட அச்சத்தை வெளிப்படுத்த ஆரம்பித்தன.
சிறிய கட்சிகள் நாம் அரசியல் களத்தில் காணாமல் போய் விடுவோமோ என்ற பெருங்கவலையில் ஆழ்ந்தனர். தமிழக பாரதீய ஜனதாக் கட்சியின் உண்மையான கவலை தமிழகம் ஒரு போர்க்களமாக மாறிவருகின்றது. சமூக விரோதிகள், தேச விரோத சக்திகள் சிறுசிறு குழுக்களாக தமிழகம் முழுவதும் நிறைந்து, தமிழ் தேசியம் எனும் முழக்கத்தின் மூலம் தனித் தமிழ் நாடு என்ற இலக்கை நோக்கிப் பயணிப்பதாகவே கருதுகின்றது.
இது அர்த்தமுள்ள கவலைதான் என்று நிரூபிக்கும் வகையில் ஜல்லிக்கட்டு போராட்டம் அமைந்தது. ஜல்லிக் கட்டுப் போராட்டத்தை பெரிய அளவில் கொண்டு சென்றது இத்தகைய பிரிவினை சக்திகளே என ஆரம்பம் முதல் கவலைப்பட்டது தமிழக பாஜக.

மீண்டும் ஜல்லிக்கட்டு தமிழகத்தில் நடைபெற மின்னல் வேகத்தில் செயல்பட்ட பாஜகவிற்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை. மாறாக மக்கள் எழுச்சி மட்டுமே ஜல்லிக்கட்டு மீண்டும் நடைபெறக் காரணம் என்று இந்தக் குழுக்கள் வலுவாகச் செய்திகளைப் பரப்பின.
தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் பல காலமாகச் செயல்படுத்தப்பட்டிருந்தாலும் இது மக்களுக்கு விரோதமானது என்று இந்தக் குழுக்கள் மக்களை மூளைச் சலவை செய்ய ஆரம்பித்தன. மீத்தேன் திட்டம் இல்லையென்றும், மக்கள் விருப்பப்படியே இத்திட்டம் நிறைவேற்றப்படும்'' என்று பாஜக எவ்வளவு கரடியாகக் கத்தினாலும் பாஜக மக்கள் விரோதமாகச் செயல்படுகின்றது என்று பட்டிதொட்டியெல்லாம் பறை சாற்றப்பட்டு வருகின்றது.
இதேபோல் நியூட்ரினோ திட்டத்தால் மக்களுக்கோ, சுற்றுச் சூழலுக்கோ எந்த பாதிப்பும் இல்லை என்று விஞ்ஞான பூர்வமாக டாக்டர் அப்துல் கலாம் உயிருடன் இருக்கும் போதே விளக்கமாகப் பேசியது, எழுதியது எல்லாம் மறக்கடிக்கப்பட்டு, மக்களுக்கு பெருந் தீங்கு ஏற்படும் திட்டத்தை பாஜக கொண்டு வருகின்றது என கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் பேசி வருகின்ற நிலையில், கடுமையான பிரச்சாரத்தை இக்குழுக்கள் மக்கள் மன்றத்தில் வலுவாக வைக்கின்றன.
சாகர் மாலா திட்டம்'' "பாதுகாப்பு காரிடார் திட்டம்'' ஆகியவை பெரிய அளவு தமிழக வளர்ச்சிக்கு உந்து சக்தியாக விளங்கப் போகின்றது என்று பாஜக பேசினாலும், இத்திட்டம் பெரும் பாதகத்தையே ஏற்படுத்தும் என்று சுற்றுச் சூழல், சமூக ஆர்வலர்கள் எனும் பெயரில் தொடர்ந்து பிரச்சாரம் செய்யப்படுகின்றது.

இந்நிலையில், இப்பிரச்சனைகள் எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தார் போல, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையின் எதிர்வினையாக 13 பேர் கொல்லப்பட்டதும், பலர் படுகாயமடைந்ததும் பாஜகவிற்கு எதிராக இந்த சக்திகளால் மிகப்பெரிய அளவிற்கு எதிர்ப்பினை தூண்டப்பட்டு வருகின்றது.
120 வருடத்திற்கும் மேலான காவிரி நீர் பிரச்சனையை சுமூகமாகத் தீர்த்து வைத்த பாஜகவிற்கு நல்ல பெயர் ஏற்படக் கூடாது என்ற இந்த சக்திகள் கவனமாகக் காய்களை நகர்த்துகின்றன. இந்த நிலையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தவும், காயம்பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்லவும் சென்ற ரஜினிகாந்த் "இந்த போராட்டம் சமூக விரோதிகளால் தூண்டப்படுகின்றது, இது தொடர்ந்தால் தமிழகம் சுடுகாடாக மாறும், புதிய தொழில்கள் வராது போகும்'' என்ற வகையில் உணர்ச்சிகரமாகப் பேசியது பாஜகவினருக்குப் பெரிய உற்சாகம் அளித்தது.

"நமது குரலாக ரஜினிகாந்த் ஒலிக்கிறார்'' என்ற பாராட்டு பாஜகவினரிடமிருந்தும், ஆதரவாளர்களிடமிருந்தும் பெரிய அளவில் வந்தது. இந்நிலையில் "காலா'' திரைப்படம் வெளியானதும் இந்து மக்கள் சார்பான அமைப்புகளுக்கும், தமிழக பாஜகவினருக்கும் மிகப் பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது. பல காட்சிகள் பாஜகவின் கொள்கைகளுக்கு விரோதமாகவே அமைந்துள்ளன.
வில்லனை ராமன் என்றும், கதாநாயகனை ராவணன் என்று சித்தரிப்பதும், "தூய்மை இந்தியா'' திட்டத்தை மறைமுகமாகக் கேலி செய்வதும் பெரியாரிசம் கம்யூனிசம், தலித்திசம் ஆகிய சித்தாந்தங்கள் மூன்றும் இணைந்து ராமனை ராவணன் கொல்வது போன்ற இறுதிக் காட்சி, ஒரு வில்லனை வெட்டிக் கொல்லும் போது விநாயகர் சிலையை கடலில் அமுக்கி கரையச் செய்வது போன்ற காட்சிகள் தேவையில்லாமல் இந்து மக்கள் மனம் புண்படும்படி அமைந்துள்ளன.
மேலும் "ஸ்டெர்லைட் போராட்டத்தில் சில சமூக விரோதிகள் நுழைந்து விட்டனர், காவலர்களைத் தாக்கியதும் இவர்களே என்றெல்லாம் பேசியது நாடகம் என்றும் பாஜகவினர் கருதுகின்றனர். ஆக, அரசியல்வாதி ரஜினிகாந்த், "தான் வியாபாரிதான், வியாபாரத்தில் வெற்றி பெற எப்படி வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் செய்வார்'' என்று பாஜக ஆதரவாளர்கள் பேசவும் எழுதவும் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.
வன்முறை, தீவிரவாதம் ஆகியவைகளை ஊக்குவிப்பதாகவும் "காலா''வில் பல காட்சிகள் வருகின்றன என்பதையும் குறிப்பிடுகின்றார்கள். "படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோயில்'' என்ற வகையில் தான் ரஜினிகாந்த் அரசியல் ஆன்மிகப் பயணம் உள்ளது என்று தெளிவாக உணர்ந்து மனம் புழுங்குகிறார்கள். "படம் வெற்றி'' "பணப்பெட்டி'' இவைகளை தமது வாழ்க்கைப் பயண இலக்கு என்று புரியவைத்துவிட்டார் என்றும் பேசுகின்றனர்.

ஆகவே "காலா'' திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியடையவில்லை என்பது அவர்களுக்கு மகிழ்ச்சியையே அளித்துள்ளது. பாஜகவின் இந்துத்வா சிந்தாந்தத்திற்கும் தேசவிரோத சக்திகளை வேரறுக்க வேண்டும் என்ற கொள்கைக்கும் எதிர்மறையாக தெரிந்தே ஒரு திரைப்படத்தைத் தயாரித்து, நடித்துள்ளார் ரஜினிகாந்த் என்று பாஜக தலைவர்கள் உணர்ந்து, உறைந்து போயுள்ளனர்.
"என் வழி தனி வழி'' எனும் பாதையில் செல்வதாகவும் அரசியல் ரீதியாக பாஜகவை ரஜினி சீண்டமாட்டார் என்ற எண்ணமும் மேலோங்கி வருகிறது. ஆகவே உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் ரஜினியுடன் உறவு கொள்ளாமல் இருப்பதே நல்லது என்று பாஜகவின் பெரும்பாலானவர்களின் கருத்தாக உள்ளது என்பதே களநிலைமை.












Click it and Unblock the Notifications