பூரண மது விலக்கு கோரி பாஜக போராட்டம்: தமிழிசை சவுந்தரராஜன் கைது
சென்னை: பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி சென்னையில் ஆர்பாட்டம் நடத்திய பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்த வலியுறுத்தி, பாஜக சார்பில் மாநிலம் முழுவதும் இன்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னையில் வடபழனி 100 அடி சாலை சந்திப்பு அருகில் உள்ள டாஸ்மாக் கடை உள்பட 15 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் பங்கேற்றுப் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், தமிழகத்தில் பச்சிளம் பாலகர்கள் கூட மதுப்பழக்கத்திற்கு அடிமையாக்கப்பட்டு வருவதாக கூறினார். தமிழ்நாட்டு மக்களுக்கு வழங்கப்படும் ஒரு சில இலவசங்களுக்காக இல்லத்தரசிகளின் தாலி காவு வாங்கப்படுவதாக கூறிய அவர், தமிழகம் முழுவதும் மதுக்கடைகளை மூடவேண்டும் என்றார்.
இதனைத் தொடர்ந்து அங்கிருந்த டாஸ்டாக் கடைக்கு தமிழிசை பூட்டு போட முயன்றார். அவரை காவல்துறையினர் கைது செய்து வேனில் ஏற்றினர். இதனை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
ஜெயங்கொண்டத்தில் டாஸ்மாக்கிற்கு எதிராக இன்று போராட்டம் நடத்திய பாஜகவினரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளின் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட ஏராளமானோரை போலீசார் கைது செய்தனர்.