ஜெ. உடலில் சுகர் அளவு அதிகரிக்க அனுமதித்தது ஏன்? போயஸ் வீட்டில் ஆம்புலனஸ் இல்லை ஏன்? தமிழிசை தடாலடி
சென்னை: மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சைப் பெற்றபோது அவருடன் இருந்தவர்கள் யார் என தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜெயலலிதா மரண விவகாரத்தில் அமைச்சர்களும் அதிமுக நிர்வாகிகளும் அளித்து வரும் முரணான தகவல்கள் அவரது சந்தேகத்தில் ஏதோ மர்மம் இருப்பதை உறுதிப்படுத்துவது போல் உள்ளது. இதனால் ஜெயலலிதா மரண விவகாரம் பூதாகரமாகியுள்ளது.
ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேகங்களை தெளிவுபடுத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதைத்தொடர்ந்து ஜெயலலிதா மரணத்தை விசாரிக்க தமிழக அரசு ஆணையம் அமைத்து உத்தரவிட்டது.
இந்நிலையில் ஜெயலலிதா மரணம் குறித்த மக்களின் சந்தேகங்களை விசாரணை ஆணையம் மூலம் தெளிவுபடுத்த வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது அவருடன் இருந்தவர்கள் யார் என்று கேள்வி எழுப்பிய தமிழிசை அவர்களிடமும் விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மரணம் குறித்து தெளிவான நிலை ஏற்படும் வரை அரசியல் செய்வார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
முந்தைய நாளில் கூட நன்றாக இருந்தார்
இதுகுறித்து தமிழிசை கருத்து தெரிவிக்கையில், ஜெயலலிதா மருத்துவமனையில் அட்மிட் செய்யப்படும் முந்தைய நாளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மிகவும் ஷார்ப்பாக இருந்தார். நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, தூரத்தில் நின்ற என்னை அதிகாரிகளை விட்டு அழைத்து அருகே நிற்க வைத்தார். அந்த அளவுக்கு அவர் ஷார்ப்பாக இருந்தார்.
Recommended Video
சர்க்ரை அளவு கூடியது ஏன்?
ஆனால், ஜெயலலிதாவுக்கு சர்க்கரை அளவு ஏன் 508 மி.கி என்ற அளவுக்கு போனது? உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டால் வீட்டிலுள்ள சிறிய மிஷின் மூலமாகவே சுகர் அளவை கண்டுபிடித்திருக்கலாமே? முன்கூட்டியே ஏன் தடுக்கவில்லை?
ஆக்சிஜன் இல்லை
ஜெயலலிதா உடலில் ஆக்சிஜன் அளவு மிக குறைவாக இருந்துள்ளது. இப்போதெல்லாம் சாமானியர்கள் வீடுகளில் கூட ஆக்சிஜன் சிலிண்டர்கள் வைத்துக்கொள்கிறார்கள். ஜெயலலிதாவுக்கு ஏன் ஆக்சிஜன் உதவி வீட்டிலேயே கொடுக்கப்படவில்லை?
ஆம்புலன்ஸ் இல்லை
முதல்வர் பயணிக்கும் இடங்களில் அவரது கான்வாயுடன் ஆம்புலன்சும் செல்வது வழக்கம். ஆனால், ஜெயலலிதா இல்லத்தில் ஏன் ஆம்புலன்ஸ் நிறுத்தப்படவில்லை. அப்பல்லோவிலிருந்து ஆம்புலன்சை வரவழைத்தது ஏன்? என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன. இவ்வாறு தமிழிசை தெரிவித்தார்.