ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜ.க. போட்டியா? விரைவில் அறிவிப்பு- தமிழிசை
சென்னை: சென்னை ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி போட்டியிடுவது குறித்து ஓரிருநாளில் முடிவு அறிவிக்கப்படும் என்று அக்கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கு அடுத்த மாதம் 27-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று தி.மு.க. அறிவித்துள்ளது. அதேநேரத்தில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளரை ஆதரிக்குமா என்பது குறித்து முடிவை அறிவிக்கவில்லை.
விடுதலை சிறுத்தைகள் கட்சியும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. இதனிடையே சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சவுந்திரராஜன், ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சியின் உயர்மட்டக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்படும். அதன் அடிப்படையில் பா.ஜ.க. போட்டியிடுமா? என்பது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு ஒருசில நாட்களில் வெளியிடப்படும் என்றார்.