நல்ல சகுனம்..ஆண்டவன் முடிவு..தமிழ்நாட்டில் அரசியல் மாற்றம்..அண்ணாமலை சொன்னதை கவனிச்சீங்களா?
மதுரை: தமிழ்நாட்டில் அறம் சார்ந்த ஆட்சி அமையப்போகிறது எனவும், அது 2024 ஆம் ஆண்டா அல்லது 2026 ஆம் ஆண்டா என்பதை ஆண்டவன் முடிவு செய்வார் எனவும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். பாரதப் பிரதமரின் ஒன்பது ஆண்டுகால சாதனையைப் பேசும் முதல் பொதுக்கூட்டம் தொடங்கும் நாளில் மழை வருவது அற்புதமான சகுனம் என்றும் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
பா.ஜ.க அரசின் ஒன்பது ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டம் நேற்று மாலை மதுரையில் நடந்தது. இதில் கலந்துகொண்டு பேசிய பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, "தமிழகம் முழுவதும் ஒரு மாதத்திற்குள் 66 இடங்களில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. அதில் முதல் கூட்டம் இங்கு தொடங்குகிறது. கட்சியில் வேலை செய்கின்ற கிளைத் தலைவர்கள் மண்டல் தலைவர்கள் எவ்வளவு முக்கியம் என்பதற்காக இந்த பொதுக்கூட்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நேரத்தில் வர்ண பகவானும் நம்மை ஆசீர்வதிக்கத் தயாராகி வருகிறார். எந்த நேரத்திலும் மழை வரலாம். கடுமையான வெய்யில் அடித்துக் கொண்டிருந்த நிலையில் பாரதப் பிரதமரின் ஒன்பது ஆண்டுகால சாதனையைப் பேசும் முதல் பொதுக்கூட்டம் தொடங்கும் நாளில் மழை வருவது நல்லதுதான். இது அற்புதமான சகுனம் என்று கூறினார். இந்த மழை வருவதன் மூலம் 2024-ல் தமிழகத்தில் நமக்கு ஆண்டவனுடைய ஆசி கிடைத்துவிட்டது என்று தெரிகிறது.
நம் நாட்டு சரித்திரத்திலயே 2014 முதல் 2023 வரைதான் மிக முக்கிய ஆண்டுகள். நாட்டில் கடைக்கோடியில் வாழும் ஒரு ஏழைக்கு என்ன வேண்டும் என்பதை நம் பிரதமர் உற்றுநோக்கி அனைத்தையும் வழங்கியுள்ளார். நம் பிரதமர் மீது கடுகளவும் குற்றச்சாட்டு வைக்க முடியாத அளவில் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. 1500 ஆண்டு பழமையான ஆதீன மடம் இங்குள்ளது. மதுரைக்கென்று தனி இடம் இந்திய அளவில் உலக அளவில் உள்ளது. சங்க காலத்தில் 3 தமிழ்சங்கங்கள், பாண்டித்துரை தேவரால் நான்காம் தமிழ்ச்சங்கம் உருவாக்கப்பட்ட ஊர். அதுபோல் தமிழுக்காக பாடுபடுகிற ஒருவர் உண்டென்றால் அது நம் பிரதமர் மோடிதான்.

செங்கோல் வழி ஆட்சி இருக்க வேண்டுமென்பதற்காக ராஜாஜியால் ஏற்பாடு செய்யப்பட்டு நேருவுக்கு வழங்கப்பட்ட செங்கோலை வாக்கிங் ஸ்டிக்காக மாற்றி அலகாபாத் ஆனந்த்பவனில் வைத்துவிட்டார். இன்று அந்த செங்கோலை திருவாசகம் பாடி, பதிகம் பாடி புதிய நாடாளுமன்றத்தில் தமிழ் ஒலிக்கச்செய்து வைத்துள்ளனர். புதிய நாடாளுமன்றத்தில் பேசப்பட்ட முதல் மொழி தமிழ். தமிழகத்திலிருந்து 21 ஆதீனங்களை அழைத்து, நம் நாதஸ்வரக் கலைஞர்கள், ஓதுவார்களை அழைத்து பிரதமர் பெருமைப்படுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்துக்கு எப்போது செங்கோல் போனதோ அப்போதே தெரிந்துவிட்டது தமிழகத்தில் அறம் சார்ந்த ஆட்சி அமையப்போகிறது என்பது. அந்த அறம் சார்ந்த ஆட்சி 2024-ல் அமையப்போகிறதா? 2026-ல் அமையப்போகிறதா என்பது விரைவில் தெரியும். ஆனால், தி.மு.க ஆட்சிக்கும் அறத்துக்கும் சம்பந்தமில்லை என்றும் அண்ணாமலை கூறினார்.












Click it and Unblock the Notifications