கன்னியாகுமரியில் கடல் திடீரென உள்வாங்கியது: படகு போக்குவரத்து ரத்து
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் இன்று கடல் உள்வாங்கியுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா படகுகள் இயக்கம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த கன்னியாகுமரியில் கடலில் அமைக்கப்பட்டுள்ள விவேகானந்தர் மண்டபம் உள்ளிட்ட இடங்களை பார்வையாளர்கள் காண வசதியாக படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் இன்று காலை நீர்மட்டம் குறைந்து கடல் உள்வாங்கி காணப்பட்டது. இதனால் கடலில் அலைகள் இல்லாமல் அமைதியாக காட்சியளித்தது.
கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு தினமும் காலை 8 மணிக்கு படகு போக்குவரத்து வழக்கமாக தொடங்கும்.
இன்று காலையில் நீர் மட்டம் குறைந்து கடல் உள்வாங்கி காணப்பட்டதால் காலை 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கவில்லை. இதனால் அங்கு படகு போக்குவரத்திற்காக காத்து நின்ற சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். நிலைமை சீரடைந்த பின்னர், படகுகள் மீண்டும் இயக்கப்படும் என பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. கடல் உள்வாங்கி இருந்ததால் காலையில் கடற்கரையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி இருந்தது.
தற்போது கன்னியாகுமரியில் அடிக்கடி கடல் நீர் உள்வாங்கத் தொடங்கியுள்ளது. கடந்த ஜூலை மாதத்தில் 3 நாட்கள் கடல் நீர் உள்வாங்கியது குறிப்பிடத்தக்கது.