இலங்கையிலுள்ள தமிழக மீனவர்களின் படகுகளும் விரைவில் மீட்கப்படும்... பொன்னார் உறுதி
சென்னை: இலங்கைக் கடற்படை வசமுள்ள தமிழக மீனவர்களின் 63 விசைப்படகுகளும் விரைவில் மீட்கப்படும் என மத்திய இணையமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 94 பேரை இந்திய சுதந்திரத் தினத்தை முன்னிட்டு இலங்கை அரசு விடுதலை செய்தது. இலங்கைச் சிறையிலிருந்த அம்மீனவர்கள் நேற்று பத்திரமாக தமிழகம் வந்து சேர்ந்தனர்.
மீனவர்களை மட்டும் விடுவித்த இலங்கை அரசு அவர்களது விசைப்படகுகளைத் திருப்பித் தர மறுத்து விட்டது. இதனால், மீனவர்கள் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கும் என கவலையில் மூழ்கியுள்ளனர்.
இந்நிலையில், சென்னையில் இன்று மத்திய இணையமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் இது தொட்ர்பாக கூறியதாவது :-
படகுகளும் மீட்கப்படும்...
இலங்கை சிறையில் இருந்த தமிழக மீனவர்கள் 94 பேரும் விடுவிக்கப்பட்டு தாயகம் திரும்பி இருக்கிறார்கள். விடுதலையான மீனவர்களின் படகுகளையும் மீட்பதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது. விரைவில் படகுகளும் மீட்கப்படும்.
தீவிர முயற்சிகள்...
இலங்கை கடற்படையின் தாக்குதலில் இருந்து தமிழக மீனவர்களை காக்கவும், கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவும் தொடர்ந்து முயற்சிகள் நடந்து வருகிறது.
ஆலோசனை....
நேற்று மீனவர் பிரதிநிதிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் மீனவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளையும், தீர்வுக்காண வழிமுறைகளையும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
நம்பிக்கை...
இந்த பேச்சுவார்த்தையின் மூலம் மிகப்பெரிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. தலைமுறை தலைமுறையாக நமது மீனவர்கள் நிம்மதியாக மீன்பிடித்து வருவதற்கான சூழ்நிலையை உருவாக்குவோம். நிரந்தர தீர்வை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறோம். நிச்சயம் வெற்றி அடைவோம் என்ற முழு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
முதல்வரின் பங்கு...
இந்த வெற்றியின் பங்கு தமிழக முதலமைச்சர் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் உண்டு. பேச்சுவார்த்தை விபரங்களை மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜிடம் இன்று தொலை பேசி மூலம் தெரிவிக்கிறேன்.
தீர்வு...
டெல்லி சென்றதும் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து மீனவர் பிரச்சினைகளையும், தீர்வுக்காக அவர்கள் வைத்துள்ள கோரிக்கைகளையும் விளக்கி கூறுவேன். நீண்ட நாட்களாக நீடித்து வரும் பிரச்சினைக்கு அவர் தீர்வு காண்பார்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.