ஜெ. வீட்டை குண்டு வைத்து தகர்ப்போம்..தொலைபேசியில் மிரட்டிய சிறுவன் கைது
சென்னை: சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள முதல்வர் வீட்டில் குண்டுவெடிக்கும் என மர்மநபர் மிரட்டல் விடுத்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் இருந்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்மநபர் போனில் மிரட்டல் விடுத்தார். போலீசார் விசாரணை நடத்தியதில் 14வது சிறுவன் போனில் பேசி மிரட்டியதாக தகவல் வரவே, சிறுவனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை போயஸ் தோட்டப்பகுதியில் உள்ள வேதா நிலையத்தில் வசித்து வருகிறார்.

இன்று காலையில் விழுப்புரத்தை அடுத்த மரக்காணம் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், முதல்வர் வீடு உள்ள போயஸ் கார்டனில் குண்டுவெடிக்கும் என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.
இது தொடர்பாக சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஏராளமான போலீசார், மோப்பநாய் உதவியுடன் முதல்வரின் இல்லத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.
முதல்வர் வீட்டில் வெடிகுண்டு வெடிக்கும் என்று மிரட்டல் போன் வந்ததை அடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தொலைபேசியில் பேசிய மர்மநபர் பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் முதல்வர் ஜெயலலிதா வீட்டில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த தஞ்சாவூரைச் சேர்ந்த ஜான்மைக்கேல் என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் திருவொற்றியூரில் வசித்து வந்ததாகவும், மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் தஞ்சாவூர் வந்ததாகவும், வெடிகுண்டு மிரட்டலில் மனைவிக்கும் பங்கு உண்டும் என்றும் அவர் போலீசில் தெரிவித்தார். இதையடுத்து அவரது மனைவியும் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறுவன் கைது
வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் தீவிரமாக தேடி கண்டுபிடித்தனர். பிடிபட்ட சிறுவனுக்கு வயது 14 என்றும் அவன் மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். அந்த சிறுவனிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாக போலீசார் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications