வேலூர் கலெக்டர் ஆபீசுக்கு வெடிகுண்டு மிரட்டல்... விடுத்தது பன்னா இஸ்மாயில் கூட்டாளியா?
வேலூர் : வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் வெடிகுண்டு வைக்கப் பட்டிருப்பதாக வந்த மர்ம தொலைபேசி அழைப்பால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள 108 ஆம்புலன்ஸ் சேவை அலுவலகத்திற்கு இன்று மதியம் ஒரு செல்போன் அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்மநபர், தன்னை வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பன்னா இஸ்மாயிலின் கூட்டாளி என அறிமுகப் படுத்திக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து இன்னும் அரை மணி நேரத்தில் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு வெடிக்கப் போகிறது எனவும் அந்நபர் மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக சென்னை கண்ட்ரோல் ரூம் மற்றும் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் ஆகியவற்றிற்கு தகவல் தெரிவிக்கப் பட்டது.
உடனடியாக வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் சகிதம் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது வெடிகுண்டு மற்றும் சந்தேகப்படும்படியான பொருள் எதுவும் சிக்கவில்லை. ஆனபோதும், தொடர்ந்து போலீசார் சோதனை நடத்தினர்.
இதற்கிடையே, வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் வெடிகுண்டு வைக்கப் பட்டிருப்பதாக தகவல் பரவியதால், அங்கு ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். பொதுமக்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் யாரையும் போலீசார் உள்ளே விட அனுமதிக்கவில்லை.
மிரட்டல் விடுத்த நபரின் செல்போன் எண் தற்போது சுவிட்ச் ஆப் செய்து வைக்கப் பட்டுள்ளதாக தெரிவித்துள்ள போலீசார், தொடர்ந்து இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications