‘உற்சாக'மாக பானம் அருந்தி தீபாவளியை கொண்டாடிய பெண்கள்.. சாலையில் மயங்கி விழுந்ததால் பரபரப்பு
தீபாவளி பண்டிகையான நேற்று சேலத்தில் சில பெண்கள் மது போதையில் சாலையில் தள்ளாடிச் சென்று, சாலையில் மயங்கி விழுந்த சம்பவம் அப்பகுதி மக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.
சேலம்: சேலத்தில் தீபாவளி நாளான நேற்று மது போதையில் சுமார் 10க்கும் மேற்பட்ட பெண்கள் சாலையில் மயங்கி அலங்கோலமாக விழுந்து கிடந்த காட்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்துக்களின் முக்கியப் பண்டிகைகளுள் ஒன்றான தீபாவளி நேற்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. புத்தாடை அணிந்து, இனிப்புகள் சாப்பிட்டு, பட்டாசுகள் வெடித்து தீபாவளியை உற்சாகமாகக் கொண்டாடினர்.
மதுபானப் பிரியர்களும் பகல் 12 மணிக்கு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டவுடன் மது அருந்தி தீபாவளியை உற்சாகமாகத் தொடங்கினர்.
அந்தவகையில், சேலம் மாவட்டம் ஓமலூரில் மேட்டூர் சாலையில் இருக்கும் டாஸ்மாக் கடையில் நேற்று மதியம் சில பெண்கள் மது வாங்கி அருந்தியுள்ளனர். பின்னர் அவர்கள் மது போதையில் சாலையில் விழுந்தனர். மேலும் சிலர் தள்ளாடியபடி சென்று பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினர்.
தீபாவளி நன்னாளில் இவ்வாறு பெண்கள் சிலர் அநாகரீகமாக நடந்து கொண்டது அப்பகுதி மக்களை முகம் சுளிக்க வைத்தது.