கார்பைடு கற்களால் விபரீதம் – மாம்பழ பேரலை திறந்த சிறுவனின் கண்கள் தீயால் பாதிப்பு
சென்னை: கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலுகா காஞ்சிரன் குளத்தை சேர்ந்தவர் கொளஞ்சி. இவரது மகன் முத்துசாமி . இவர் 10 ஆம் வகுப்பு முடித்துவிட்டு கடந்த ஒரு ஆண்டாக கோயம்பேடு பழம் மார்க்கெட்டில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வருகிறார்.
இந்த கடைக்கு வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து மாம்பழங்கள் வருவது வழக்கம். காயாக வரும் பழங்களை கார்பைடு கற்கள் கொண்டு பழுக்க செய்து விற்பனை செய்கிறார்கள்.
இந்நிலையில் ஒரு இரும்பு பேரலில் கார்பைடு கற்களால் மாம்பழங்களை பழுக்க வைத்து இருந்தனர். நேற்று மாலை முத்துசாமி அந்த பேரலை திறந்தார். அப்போது திடீரென அதில் இருந்து வந்த தீ ஜுவாலை முத்துசாமி முகத்தில் பட்டது.
இதனால் முகம் கருகி அவர் அலறினார்.இதனால் உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முத்துசாமியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவருக்கு கண்ணில் பலத்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறினர். முத்துசாமியால் கண்களை திறக்க முடியவில்லை.
அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.புகாரின்பேரில் கோயம்பேடு மார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். கார்பைடு கற்களால் பழுக்க செய்த மாம்பழம் எடுக்க முயன்றபோது சிறுவன் கண்ணில் காயம் ஏற்பட்ட சம்பவம் கோயம்பேடு மார்க்கெட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications