7 பேருக்கு மறுவாழ்வு கொடுத்த கோவை கல்லூரி மாணவர் – விபத்தில் இறந்தவர் உறுப்புகள் தானம்
கோவை: கோவை விபத்தில் மூளைச்சாவடைந்த இளைஞரின் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதால் 7 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.
கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் வக்கீல் மோகன். இவரது மகன் அருண்குமரன், பொறியியல் கல்லூரி மாணவர்.
சம்பவத்தன்று அருண்குமரன் கரூர்- வேடச்சந்தூர் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அருண்குமரன் படுகாயம் அடைந்தார்.
அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை கே.எம்.சி.எச் மருத்துவமனையில் அருண்குமரன் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் அருண்குமரனின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
கடந்த 12 ஆம் தேதி அருண்குமரன் மூளைச்சாவு அடைந்தார். இது குறித்து அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். மகனின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க பெற்றோர் சம்மதித்தனர்.
இதனையடுத்து நேற்று அருண்குமரனின் இதயம், 2 சிறுநீரகம், கண்கள், கல்லீரல் மற்றும் நுரையீரல் ஆகியவை அகற்றப்பட்டன. கண்கள் அரவிந்த் கண் மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.
மற்ற அனைத்து உறுப்புகளும் அதே மருத்துவமனையில் அந்தந்த உறுப்புகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொறுத்தப்பட்டன. அருண்குமரனின் உறுப்பு தானத்தால் 7 பேர் மறுவாழ்வு பெற்றனர். இந்த சம்பவம் கோவை மற்றும் கரூர் பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.