தமிழகத்தில் முதன்முறையாக இறந்தவரின் “தோல்” தானம்
சென்னை: தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக மூளைச்சாவில் இறந்தவரின் தோல் தானமாகப் பெறப்பட்டு சேமித்து வைக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர் வாசுதேவன். கடந்த வாரம் தாம்பரம் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் படுகாயமடைந்தார். உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, தலைக் காயத்தைச் சீர் செய்ய அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது.
தொடர் சிகிச்சைக்காக அவர் மணப்பாக்கம் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் அவர் மூளைச் சாவு நிலையை அடைந்தார்.
இந்நிலையில் அவரது உடல் உறுப்புகளைத் தானமாக அளிக்க அவரது உறவினர்கள் முன்வந்தனர். அவரது கல்லீரல், இதய வால்வுகள் தனியார் மருத்துவமனைக்கு தானமாக அளிக்கப்பட்டன. கண்கள் சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனைக்கு தானமாக அளிக்கப்பட்டன.
அவரது தோல் முதன்முறையாக சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ரைட் மருத்துவமனைக்கு தானமாக அளிக்கப்பட்டது. ரைட் மருத்துவமனையில் தோல்களை பாதுகாக்கும் வங்கி உள்ளது.
இது குறித்து ரைட் மருத்துவமனையின் தலைவரும், பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை நிபுணருமான ஜி.பாலகிருஷ்ணன் கூறியபோது,
"தானமாகப் பெறப்பட்ட தோல், தீக்காயங்களால் பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும்.ஒருவர் இயற்கையாக இறந்தவுடனும் தோலை தானமாகப் பெற்று சேமித்து வைத்துப் பயன்படுத்த முடியும்.
இறந்தவர் அல்லது மூளைச் சாவுக்கு உள்ளானவர் உடலில் இருந்து தோலை தானமாகப் பெற்ற பிறகு எந்த விகாரமும் தெரியாதவாறு தோலை நீக்கிய இடத்தில் "பேண்டேஜ்" போடப்படும்.
தானமாகப் பெறப்பட்டு சேமித்து வைக்கப்படும் தோல் தீக்காயம் அடைந்தவர்களுக்கு "கிராப்ட்" முறையில் பொருத்தப்படும். இதனால் தீக்காயம் நன்றாக ஆறி, பொருத்தப்பட்ட தோல் உரிந்து புதிய தோல் உருவாகி விடும்" என்றார்.












Click it and Unblock the Notifications