தாய்லாந்து வேண்டாம் தாய்நாடே போதும்– திருமண மண்டபத்திலிருந்து ஓடிய மணப்பெண்!
சென்னை: திருமணத்திற்குப் பின்னர் இந்தியாவை விட்டு தாய்லாந்திற்குச் செல்ல முடியாது என்று மணப்பெண் ஒருவர் மண்டபத்தை விட்டு ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பையும், கலகலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாதவரம் திருமலை நகரை சேர்ந்தவர் ஸ்ரீதர் . தாய்லாந்தில் வேலை பார்த்து வருகிறார்.
அதே மாதவரம் தணிகாசலம் நகரில் வசித்து வரும் பெண்ணுக்கும், இவருக்கும் கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
திருமண ஏற்பாடுகள்:
பம்மலில் இருவருக்கும் நேற்று திருமணம் நடத்துவது என்று முடிவு செய்திருந்தனர். அதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்தது. நேற்று முன்தினம் காலையிலேயே உறவினர்கள் பலர் மண்டபத்துக்கு வந்துவிட்டனர்.
காணமல் போன மணமகள்:
இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம், வீட்டில் இருந்த மணமகளை காணவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் அவரை தேடினர்.
அதிர்ச்சியடைந்த மணமகன்:
ஆனால், எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதனால் மாப்பிள்ளை வீட்டாருக்கு மணமகளை காணவில்லை என்ற தகவல் தெரிவித்தனர். அவர்களும் அதிர்ச்சியடைந்தனர்.
போலீசில் புகார்:
இந்நிலையில் ஸ்ரீதரின் மாமா, மாதவரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து, மணப்பெண்ணின் செல்போன் மூலம் தொடர்பு கொண்டனர். அப்போது அவர் எம்கேபி நகர் பாரதியார் நகரில் உள்ள முருகன் கோயிலில் இருப்பது தெரிந்தது.
தாய்லாந்து செல்ல விருப்பமில்லை:
அவரிடம் சென்று விசாரித்த போது தாய்லாந்து செல்ல எனக்கு பிடிக்கவில்லை. அதனால் இந்த திருமணத்தில் எனக்கு விருப்பம் இல்லை என கூறியுள்ளார்.
போலீசார் அறிவுரை:
இதையடுத்து அவரை சமாதானப்படுத்தி போலீசார், காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். அவருக்கு அறிவுரை கூறி பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.
திடீர் மணமகளான ஆசிரியை:
இதையடுத்து திருமணத்துக்கு வந்திருந்த புதுச்சேரியை சேர்ந்த உறவினர் மகளான ஆசிரியை ஒருவரிடம் பேசி அவரை சம்மதிக்க வைத்தனர். இதையடுத்து ஸ்ரீதருக்கும், ஆசிரியைக்கும் அதே மண்டபத்தில் திருமணம் நடந்தது. தம்பதிகள் மகிழ்ச்சியுடன் புதிய வாழ்க்கையை ஏற்றுக் கொண்டனர்.
டீச்சர் நீங்களாவது தாய்லாந்து போவீங்களா....?