இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்ட மீனவர் பிரிட்ஜோவின் உடல் நல்லடக்கம்
இலங்கை மீனவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டு உயிரிழந்த மீனவர் பிரிட்ஜோவின் உடல் தங்கச்சிமடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
ராமேஸ்வரம்: இலங்கை மீனவர்களால் கொல்லப்பட்டு ராமேஸ்வரம் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த மீனவர் பிரிட்ஜோவின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு தங்கச்சிமடம் அந்தோணியார் கல்லறைத் தோட்டத்தில் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
தனுஷ்கோடிக்கும், கச்சதீவுக்கும் இடையே உள்ள கடல் பகுதியில் கடந்த 6 -ஆம் தேதி மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீது வாட்டர் ஸ்கூட்டரில் வந்த இலங்கை ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் பிரி்ட்ஜோ என்ற மீனவர் கொல்லப்பட்டார்.
இந்நிலையில் பிரிட்ஜோவை சுட்டுக் கொன்ற இலங்கை கடற்படை வீரரை கைது செய்ய வேண்டும். மீனவர்கள் மீதான துப்பாக்கிச் சூட்டுக்கு தீ்ர்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை ராமேஸ்வரம் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட அவரது உடலை வாங்க மாட்டோம் என்று கூறி தங்கச்சிமடத்தில் மீனவர்களும், பிரிட்ஜோவின் உறவினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
கடந்த 7 நாள்கள் நிறைவடைந்த நிலையில் நேற்று தங்கச்சிமடத்துக்கு சென்ற மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பிரிட்ஜோவின் உடலை பெற்று நல்லடக்கம் செய்ய வேண்டும் என்றும் அவர்களது நியாயமான கோரிக்கை குறித்து பிரதமரிடம் தெரிவிப்பதாகவும் நிர்மலா சீதாராமன் உறுதியளித்தார். இதைத் தொடர்ந்து பிரிட்ஜோவின் உடலை அடக்கம் செய்ய உறவினர்கள் முடிவு செய்தனர். அதன்படி ராமேஸ்வரத்தில் வைக்கப்பட்டிருந்த பிரிட்ஜோவின் உடலை இன்று அவரது உறவினர்கள் பெற்றுக் கொண்டனர்.
சுமார் 15 கி.மீ. தூரம் உள்ள தங்கச்சிமடத்துக்கு அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். பின்னர் பிரிட்ஜோவின் உடல் போராட்ட களத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அதன்பின்னர் தங்கச்சிமடத்தில் உள்ள அந்தோணியார் கல்லறைத் தோட்டத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. சுமார் 7 நாள்களுக்கு பிறகு பிரிட்ஜோ உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.