விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவளித்த பிரிட்டன் எம்பி.. ஏர்போர்ட்டில் தடுத்து வைப்பு.. பஞ்சாபில் பரபர
அமிர்தசரஸ்: வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நடத்திய போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த பிரிட்டன் எம்பி தன்மன்ஜீத் சிங் தேசி, நேற்று பஞ்சாப் வந்திருந்த நிலையில் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் சுமார் 2 மணி நேரம் வரை தடுத்து வைக்கப்பட்டிருந்துள்ளார். இந்த சம்பவம் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பாஜக அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் பெரும் போராட்டங்கள் நடைபெற்றன. டெல்லியில் தொடங்கிய இந்த போராட்டம் பல்வேறு மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்றது. டெல்லியில் நடந்த போராட்டங்களில் பஞ்சாப், ஹரியானாவை சேர்ந்த விவசாயிகள் அதிக அளவு பங்கேற்றிருந்தனர். இந்த போராட்டத்திற்கு சர்வதேச அளவில் ஆதரவும் கிடைத்தது. இந்த ஆதரவாளர்கள் பட்டியலில் தன்மன்ஜீத் சிங்கும் ஒருவர்.

பிரிட்டன் எம்பியான இவர் இந்த போராட்டத்திற்கு பகிரங்கமாக தன்னுடைய ஆதரவை அளித்திருந்தார். இதனால் ஏராளமான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானார். அதாவது, இவரை காலிஸ்தான் ஆதரவாளர் என்று பாஜகவினர் கடுமையாக விமர்சித்தனர். "காஷ்மீர் விவகாரத்திலும் சரி, விவசாயிகள் பிரச்னைகளிலும் சரி அவர் இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை தொடர்ந்து கூறி வருகிறார். அவர் காலிஸ்தான் இயக்கங்களுடன் நெருங்கிய தொடர்பை கொண்டிருக்கிறார்" என்று பாஜக தலைவர்கள் கடுமையாக விமர்சித்திருந்தனர்.
இந்நிலையில் அவர் நேற்று பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸுக்கு வந்தார். காலை 9 மணிக்கு ஏர்போர்ட்டில் வந்திறங்கிய அவரை அப்படியே குடியேற்ற அதிகாரிகள் அலேக்காக வேறு ஒரு அறைக்கு அழைத்து சென்றனர். பின்னர் சுமார் 11 மணிக்குதான் அவர் வெளியில் அனுப்பப்பட்டிருக்கிறார். ஆனால் எதற்காக இவர் தடுத்து வைக்கப்பட்டார்? என்பதற்கான எந்த காரணமும் இதுவரை சொல்லப்படவில்லை. குடிவரவு அதிகாரிகள் உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்குகின்றனர்.
இந்நிலையில், டிவிட்டரில் தான் தடுத்து வைக்கப்பட்டிருந்தது தொடர்பாக கடுமையான விமர்சனத்தை தன்மன்ஜீ்த் சிங் தெரிவித்துள்ளார். அதாவது, "எனது விசாவை ரத்து செய்ய சிலர் கூறியிருந்தனர். விவசாயிகள், விளிம்புநிலை மக்கள் மற்றும் சீக்கியர்கள் போன்ற சிறுபான்மையினர் பக்கம் நிற்பதற்காக செலுத்த வேண்டிய விலை இது" என்று ட்வீட் செய்திருக்கிறார். இந்த சம்பவம் பஞ்சாப் மாநிலத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக தன்மன்ஜீத் சிங் எப்போது பஞ்சாப் வந்தாலும் விவசாயிகள் சார்பில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications