அதெப்படி எனக்கு அட்வைஸ் பண்ணலாம்? கோவை பேராசிரியரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்த 'சகலை'!
கோவை: அறிவுரை கூறிய பேராசிரியரை அவரது சகலையே வெட்டிக் கொன்ற சம்பவம் கோவையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகிலுள்ள வெள்ளாள பாளையத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் மனைவி சசிரேகா. இவர்களுக்கு ஏழு வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இவர் கோவை சாய்பாபா காலனியில் உள்ள ராமலிங்கம் காலனி என்ற பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கார்த்திகேயன், இங்குள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லுாரியில் விரிவுரையாளராக பணியாற்றுகிறார். இவரது மனைவியும், பெண்கள் கல்லுாரி பேராசிரியராக பணியாற்றுகிறார்.
சத்தியமங்கலம் அருகிலுள்ள சுண்டப்பாளையத்தில் சசிரேகாவின் அக்கா அனிதாவும் அவரது கணவர் மகேஸ்வரன் என்பவரும் வசிக்கின்றனர். இருவரும், பண்ணாரியம்மன் கல்லுாரியில் அலுவலக உதவியாளராக பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மகேஸ்வரன் உடல்நிலை சரியில்லாமல் உள்ளதாகவும், இதனால் தற்போது வேலைக்கு போகாமல் வீட்டிலேயே இருப்பதாகவும் இதனால் நிறைய கடன் வாங்கியுள்ளதாகவும் தெரிகிறது.
இந்நிலையில் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறுவதற்காக நேற்று முன்தினம் அனிதா தனது கணவர் மகேஸ்வரனை அழைத்துக்கொண்டு கோவை வந்துள்ளார். அங்கு தங்கை வீட்டில் தங்கிக்கொண்டு மருத்துவமனைக்குச் சென்று வந்துள்ளனர். குடும்ப பிரச்சனைகள் தொடர்பாக நேற்று முன்தினம் அனைவரும் விவாதித்துள்ளனர். இதில் மகேஸ்வரனுக்கு பேராசிரியர் கார்த்திகேயன் அறிவுரை கூறியுள்ளார். ஆனால் மகேஸ்வரன் இதை ஏற்காமல் கார்த்திகேயன் மீது கோபமடைந்துள்ளார்..
இந்த நிலையில்தான் நள்ளிரவு 1:30 மணிக்கு வீட்டிலிருந்த அரிவாளை எடுத்து துாங்கிக்கொண்டிருந்த கார்த்திகேயனையும் அவரது மனைவி சசிரேகாவையும் மகேஸ்வரன் சரமாரியாக வெட்டினார்.
இதில் கார்த்திகேயன் சம்பவ இடத்திலேயே பலியானார். காயமுற்ற அவரது மனைவி, கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். மகேஸ்வரனை போலீசார் கைது செய்துள்ளனர். மாமனார் வீட்டில் சகலை கார்த்திகேயனுக்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பதால் தாம் ஆத்திரத்தில் கொலை செய்ததாக அவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.