பிரதமரின் ஜன்-தன் யோஜனா திட்டபயனாளிகளுக்கு இலவச சிம் கார்டுகள்
திருநெல்வேலி: பிரதமரின் ஜன்-தன் யோஜனா திட்டத்தில் (வீட்டுக்கொரு வங்கிக் கணக்குத் திட்டம்) வங்கிக் கணக்குப் பெற்றவர்களுக்கு பி.எஸ்.என்.எல். சார்பில் இலவச சிம் கார்டுகள் வழங்கப்படுகிறது.
இதுதொடர்பாக, திருநெல்வேலி தொலைத் தொடர்பு மாவட்ட பி.எஸ்.என்.எல். பொதுமேலாளர் ப. முருகானந்தம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பிரதமரின் ஜன்-தன் யோஜனா திட்டத்தின்கீழ் வங்கிக் கணக்கு இல்லாத பொதுமக்களுக்கு வங்கிகளில் புதிதாக சேமிப்பு வங்கிக் கணக்கு தொடங்கப்படுகிறது. இவ்வாறு வங்கிக் கணக்குத் தொடங்கியுள்ளவர்களுக்கு பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது பிரீபெய்டு செல்போன் இணைப்புகளுக்கான சிம் கார்டுகளை முற்றிலும் இலவசமாக கடந்த 8 ஆம் தேதி முதல் வழங்கி வருகிறது.
தொடர்ந்து 90 நாள்களுக்கு இவ்வாறு சிம் கார்டுகள் வழங்கப்பட உள்ளது. இந்த இலவச சிம் கார்டுகளை பி.எஸ்.என்.எல்.லின் வாடிக்கையாளர்கள் சேவை மையங்களில் இருந்து மட்டும் பொதுமக்கள் பெறமுடியும். புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள தங்களது வங்கிக் கணக்குப் புத்தகத்துடன் வந்து இலவச சிம் கார்டுகளைப் பெற்றுக் கொள்ளலாம். புதிய சிம் கார்டுகள் பெறுவதற்கான இதர விதிமுறைகளும் பொருந்தும் என குறிப்பிடப்பட்டுள்ளது. நாடுமுழுவதும் இந்தத் திட்டம் அமலில் உள்ளது.












Click it and Unblock the Notifications