அதிகாரிகள் மரணம், வினாத்தாள் அவுட்.. சட்டசபையில் நாளை அதகளத்துக்கு தயாராகும் எதிர்க்கட்சிகள்!
சென்னை: தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை காலை தொடங்குகிறது. இந்தக் கூட்டத்தொடரில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை, லஞ்ச ஊழல் விவகாரம், வேளாண் அதிகாரி முத்துகுமாரசாமி, சுகாதாரத்துறை அதிகாரி அறிவொளி மரணம் குறித்த பிரச்சனைகளை எதிர்க்கட்சிகள் எழுப்ப தயாராக உள்ளன.
தமிழக சட்டசபை நாளை கூடுகிறது. காலை 10:00 மணிக்கு முதல்வர் பன்னீர்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்வார் என, அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் பன்னீர்செல்வம், தொடர்ந்து ஐந்தாவது முறையாக, பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார். கடந்த நான்கு முறையும், அவர் நிதி அமைச்சராக மட்டும் இருந்தார். இம்முறை முதல்வராக உள்ளார்.

முதல்வரின் முதல் பட்ஜெட்
முதல்வராக பொறுப்பேற்ற பின், அவரது அரசின் முதல் பட்ஜெட், நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது. அடுத்த ஆண்டு, சட்டசபைக்கு தேர்தல் வர உள்ளதால், பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள் இடம் பெற வாய்ப்புள்ளது.
நிதி ஒதுக்கீடு
அத்துடன், கடந்த முறை போல், இம்முறையும் நதி நீர் இணைப்பு மற்றும் மோனோ ரயில் திட்டத்திற்கு, நிதி ஒதுக்க வாய்ப்புள்ளது. ஏற்கனவே செயல்படுத்தப்படும் இலவச திட்டங்களுக்கும், வழக்கம் போல் நிதி ஒதுக்கீடு செய்யப்படலாம்.
எதிர்கட்சிகள் தயார்
இந்தக் கூட்டத்தொடரில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை, லஞ்ச ஊழல் விவகாரம், வேளாண் அதிகாரி முத்துகுமாரசாமி, சுகாதாரத்துறை அதிகாரி அறிவொளி மரணம் குறித்த பிரச்சனைகளை எதிர்க்கட்சிகள் எழுப்ப உள்ளன.
தேமுதிக எம்.எல்.ஏக்கள்
தேமுதிக எம்.எல்.ஏ.,க்களில், விஜயகாந்த் தவிர, மற்றவர்கள் யாரும், நாளைய கூட்டத்தில் பங்கேற்க இயலாது. ஏனெனில், அவர்களை இந்தக் கூட்டத்தொடர் முழுவதற்கும், 'சஸ்பெண்ட்' செய்து, சபாநாயகர் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
எதிர்கட்சிகள் புறக்கணிப்பு?
அதேநேரத்தில், தேமுதிக எம்எல்ஏக்களின் சஸ்பெண்ட் நடவடிக்கையை ரத்து செய்யும்படி, நாளை சட்டசபையில் வலியுறுத்த, தி.மு.க., மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் முடிவு செய்துள்ளன. அதை, ஆளுங்கட்சி ஏற்காவிட்டால், பட்ஜெட்டை புறக்கணிக்கவும் வாய்ப்பு உள்ளது.
விஜயகாந்த் வருவாரா?
எனவே, முதல்வர் பன்னீர்செல்வம், பட்ஜெட் தாக்கல் செய்யும்போது, எதிர்க்கட்சி வரிசையில், எம்.எல்.ஏ.,க்கள் இருப்பரா? இல்லை வெளியேறி விடுவரா என்பது புதிராக உள்ளது. தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில், பட்ஜெட் மீதான விவாதத்தில், எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் பங்கேற்பாரா என்ற எதிர்பார்ப்பும், மக்களிடம் ஏற்பட்டுள்ளது.
வரிச்சலுகைகள் கிடைக்குமா?
தமிழக சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் நடக்கவுள்ளது. எனவே, அடுத்த ஆண்டில் இடைக்கால பட்ஜெட்டை மட்டுமே இந்த அரசு தாக்கல் செய்ய முடியும். நாளை தாக்கல் செய்யப்படுவது, தேர்தலுக்கு முந்தைய முழுமையான பட்ஜெட் என்பதால், இதில் பல புதிய திட்டங்கள், அறிவிப்புகள் மற்றும் வரிச்சலுகைகளை எதிர்பார்க்கலாம். அரசு ஊழியர், ஆசிரியர் நியமனம், அரசு ஊழியர்களுக்கான 7-வது ஊதியக்குழு, விவசாயக்கடன் வட்டி தள்ளுபடி, புதிய கல்லூரிகள் போன்றவை தொடர்பான அறிவிப்புகள் வெளியாவதற்கும் வாய்ப்புள்ளது.
புதிய ஓய்வூதிய திட்டம்
அனைத்து அரசு ஊழியர் சங்கங்களும், ஆசிரியர் சங்கங்களும் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. எனவே, பட்ஜெட்டில் ஓய்வூதிய திட்டம் குறித்த அறிவிப்பை அரசு பணியில் உள்ளவர்கள் மட்டுமின்றி புதிதாக சேர விரும்பும் இளைஞர்களாலும் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
எத்தனை நாள்?
இதனைத் தொடர்ந்து சபாநாயகர் தனபால் தலைமையில், அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் பட்ஜெட் கூட்டத்தொடரை எத்தனை நாளைக்கு நடத்துவது என்பது குறித்து முடிவு எடுக்கப்படுகிறது. வரும் 31ஆம் தேதி வரை இந்தக் கூட்டத்தொடர் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications