ஆட்சிக்கு வந்ததுமே ஓ.பி.எஸ்ஸை வீட்டை காலி செய்ய நோட்டீஸ் விட்ட அதிமுக அரசு
எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பொறுப்பேற்ற உடன் ஓபிஎஸ் குடியிருக்கும் வீட்டை காலி செய்ய வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை: அடையாறு கிரீன் வேஸ் சாலையில் ஓபிஎஸ் குடியிருக்கும் வீட்டை காலி செய்ய நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்ஸுக்கு மேலும் நெருக்கடியை வழங்கி வருகிறது அதிமுக தலைமையிலான தமிழக அரசு.
எடப்பாடி பழனிச்சாமி நேற்று மாலை முதல்வராக பதவி ஏற்றார். அடுத்த நிமிடமே முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் குடியிருக்கும் வீட்டை சசிகலா ஆதரவாளர் கல்வீசி தாக்கினார்கள்.
இதனைத் தொடர்ந்து, ஓபிஎஸ்ஸுக்கு மேலும் நெருக்கடி முற்றி வருகிறது. தற்போது அவர் குடியிருக்கும் பங்களாவை காலி செய்ய வேண்டும் என்று பொதுப்பணித் துறையில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஓபிஎஸ் பங்களா
தமிழக அமைச்சராக இருந்த ஓபிஎஸ் 2011ம் ஆண்டு முதல் சென்னை அடையாறு பகுதியில் உள்ள கிரீன் வேஸ் சாலையில் உள்ள பங்களாவில் வசித்து வருகிறார். அரசு வழங்கியுள்ள இந்த பங்களாவில் இருந்த படியேதான் சசிகலாவிற்கு எதிரான பேச்சுக்களை பொது தளத்தில் ஓபிஎஸ் வைத்தார். அதனைத் தொடர்ந்து பல்வேறு கூட்டங்கள், செய்தியாளர் சந்திப்பு என அனைத்தும் அந்த வீட்டில் இருந்த படியே நடந்து வந்தது.
நெருக்கடி
இதனையடுத்து, சசிகலா ஆதரவாளரான எடப்பாடி பழனிச்சாமி நேற்று முதல்வராக பதவி ஏற்றார். அவர் பொறுப்பேற்ற சிறிது நேரத்திற்கெல்லாம் பொதுப்பணித்துறையின் மூலம் ஓபிஎஸ்ஸுக்கு நெருக்கடி அதிகமாகியுள்ளது.
நோட்டீஸ்
அமைச்சர்களுக்கு பங்களாக்களை பொதுப் பணித்துறை செயலாளர் அலுவலகம்தான் ஒதுக்கி வருகிறது. இந்தத் துறை தற்போது எடப்பாடி பழனிச்சாமியின் வசம் வந்துள்ளது. இதனையடுத்து, இந்த அமைச்சகத்தின் துறை செயலாளர் அலுவலகத்தில் இருந்து ஓபிஎஸ்ஸுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ள இந்த நோட்டீஸ் ஓபிஎஸ் கைக்கு கிடைத்த உடன் பங்களாவை காலி செய்து தர வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
காலி செய்யவில்லை என்றால்?
நோட்டீசில் குறிப்பிட்டுள்ளவாறு பங்களா காலி செய்யப்பட வில்லை என்றால், மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு, கழிவுநீர் குழாய் இணைப்புகளை துண்டிக்க வாய்ப்புள்ளதாகவும் பொதுப்பணித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், கல்வித் துறை அமைச்சராக பொறுபேற்றுள்ள செங்கோட்டையனுக்கு ஓபிஎஸ் வசித்த பங்களா ஒதுக்கப்படலாம் என்றும் கூறப்படுகின்றன.