குணமடைந்த தீக் குழந்தை... "ஜெயராமச்சந்திரன்" என்று பெயர் சூட்டிய டாக்டர்!
சென்னை: உடலில் தானாக தீப்பிடிப்பதாக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த குழந்தைக்கு ஜெயராமச்சந்திரன் என்று தலைமை மருத்துவர் நாராயணபாபு பெயர் சூட்டியுள்ளார். குழந்தை நலமடைந்ததை அடுத்து நேற்று விழுப்புரத்தில் உள்ள அவர்களின் வீட்டுக்கு பெற்றோர் அழைத்துச்சென்றனர்.
விழுப்புரம் மாவட்டம், பரங்கணி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஸ்வரி, கருணாகரன் தம்பதியர். இவர்களுக்கு கடந்த ஜனவரி 9ம் தேதியன்று ஆண் குழந்தை பிறந்தது. அதே மாதம் 13ம் தேதியன்று அந்த குழந்தையின் காலில் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. ஆனால், அக்குழந்தை வலியினால் அழவில்லை. குழந்தையின் உடலில் தீயைப் பார்த்ததும் தாய் ராஜேஸ்வரி ஓடிச்சென்று தீயை அணைத்தார். உடனடியாக அக்குழந்தையை விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அக்குழந்தை அனுப்பி வைக்கப்பட்டது. இங்கு பச்சிளம் குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் அக்குழந்தை அனுமதிக்கப்பட்டது.
அங்கே குழந்தைகள் நல தலைமை மருத்துவர் ஜெயச்சந்திரன், சத்தியமூர்த்தி, தீக்காய சிகிச்சை நிபுணர் நிர்மலா ஆகியோரை கொண்ட குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினர் கடந்த 82 நாட்களாக அக்குழந்தைக்கு சிகிச்சை அளித்தனர்.
இதைத் தொடர்ந்து, அக்குழந்தை முற்றிலும் குணமானது. இதைத் தொடர்ந்து, அக்குழந்தையை நேற்று காலை கீழ்பாக்கம் மருத்துவ கல்லூரி முதல்வரும் குழந்தைகள் நல மருத்துவருமான ஆர்.நாராயணபாபு பரிசோதனை செய்தார். அக்குழந்தை முற்றிலும் குணமாகி விட்டது என்று கூறி, அக்குழந்தையை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்தார்.

ஜெயராமச்சந்திரன்
பின்னர் அக்குழந்தைக்கு பெயர் வைக்கும்படி தலைமை மருத்துவரிடம் தாய் ராஜேஸ்வரி கேட்டுக் கொண்டார். அவர்களது விருப்பத்தின்படி, குழந்தைக்கு ஜெயராமச்சந்திரன் என்று தலைமை மருத்துவர் நாராயணபாபு பெயர் சூட்டினார்.

82 நாட்கள் சிகிச்சை
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கீழ்பாக்கம் மருத்துவமனையின் டீன் ஆர்.நாராயணபாபு, இந்த குழந்தை பிறந்த 5 வது நாளே அதன் கால்களில் தீப்பிடித்து எரிந்தது. இதைத் தொடர்ந்து விழுப்புரம் மருத்துவமனையிலும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் நல தீவிர சிகிச்சை பிரிவில் கடந்த 82 நாட்களாக சிகிச்சை மேற்கொண்டோம்.

40 வகை பரிசோதனை
இக்குழந்தையின் தீவிர சிகிச்சைக்காக இதுவரை ரூ.72 ஆயிரம் செலவு ஆகியுள்ளது. கீழ்பாக்கம் மருத்துவமனையில் அக்குழந்தை அனுமதிக்கப்பட்டபோது 2 கிலோ இருந்தது. தற்போது அதன் எடை 5 கிலோவாக அதிகரித்து உள்ளது. இதுவரை இந்த குழந்தைக்கு தீப்பிடிக்கும் காரணத்தை அறிவதற்கான 40 வகையான பரிசோதனைகள் நடைபெற்றது. இதில் குழந்தையின் உடலில் எந்தவிதமான குறைபாடுகளும் காணப்படவில்லை.

இரண்டு குழந்தைகளுக்கும் தீ
இதைப் போல, ராஜேஸ்வரி-கருணாகரன் தம்பதிக்கு பிறந்த 2வது குழந்தை ராகுல் பிறந்த ஒரே மாதத்தில் அடுத்தடுத்து 3 முறை தீப்பிடித்தது. அந்த குழந்தைக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

அட்வைஸ்
தற்போது அந்த குழந்தைகளுக்கு மருத்துவமனை சிகிச்சையின்போது தீப்பிடிக்கவில்லை. அவற்றை பாதுகாப்பாக கவனித்து கொள்ளுமாறு பெற்றோருக்கு நாங்கள் ஆலோசனை கூறியுள்ளோம். அவர்கள் வசிக்கும் பகுதி காவல் நிலையம் மூலமாக கண்காணிக்குமாறு விழுப்புரம் மாவட்ட போலீஸ் அதிகாரியிடமும் அறிவுறுத்தி உள்ளதாகவும் நாராயணபாபு கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications