ஒகேனக்கல் மலைப் பாதையில் பஸ் கவிழ்ந்து 7 பேர் பலி - 30க்கும் மேற்பட்டோர் காயம்
ஒகேனக்கல்: ஒகேனக்கல் மற்றும் திண்டுக்கல் பகுதிகளில் நடைபெற்ற இரண்டு விபத்துகளில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
தர்மபுரியிலிருந்து அஞ்செட்டிக்கு இன்று அரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, ஒகேனக்கல் அருகே கணவாய் என்ற இடத்தில் மலைப்பாதையின் வளைவில் பேருந்து திரும்பியபோது, 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 7 பேர் பலியானார்கள். டிரைவரின் கட்டுப்பாட்டை பேருந்து இழந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.

விபத்தில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது. 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது.

மீட்புப் பணிகள் முடிவடைந்த நிலையில் 29 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மக்களே மீட்புப் பணியில் ஈடுபட்ட நிலையில் 108 ஆம்புலன்ஸ் தாமதமாக வந்ததாக புதிய பூகம்பம் கிளம்பியுள்ளது.
தை அமாவாசைக்காக ஒகேனக்கல் வந்தவர்களும், மற்ற பயணிகளும் இதில் அடங்குவர். அதிக பயணிகளை ஏற்றியதே இதற்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பென்னாகரம் மற்றும் தர்மபுரி மருத்துவமனைகளில் பயணிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். அதிக அளவிலான காயமடைந்தவர்கள் தர்மபுரி அரசுக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிட்டதட்ட 250க்கும் மேற்பட்ட மருத்துவமனைப் பணியாளர்கள் முதலுதவியில் ஈடுபட்டுள்ளனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் மேலும் மூன்று பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசுப் பேருந்து ஓட்டுநரின் நிலைமையும் கவலைக்கிடமாக உள்ளது.

பேருந்தானது முழுவதுமாக நொறுங்கிய நிலையில், தீயணைப்பு படையினர் சேதமடைந்த வாகனங்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அதேபோல், திண்டுக்கல் - கரூர் சாலையில் சென்றுகொண்டிருந்த கார் ஒன்று தனது கட்டுப்பாட்டை இழந்தது. கட்டுப்பாட்டை இழந்த கார், மற்றொரு கார் மீது மோதியது.

இதில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்தனர். 4 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த 4 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications