பஸ் கட்டண உயர்வை திரும்ப பெறும் வரை போராட்டம் தொடரும்- கல்லூரி மாணவர்கள் உறுதி
பஸ் கட்டண உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் மூன்றாவது நாளாக இன்றும் பல ஊர்களில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இலவச பஸ்பாஸ் திட்டம் தொடரும் என்று கூறியும் மாணவர்கள் போராடி வருகின்றனர்.
Recommended Video
சென்னை: உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தி 3வது நாளாக தமிழகத்தில் பல்வேறு ஊர்களில் அரசு கலைக்கல்லூரி, பாலிடெக்னிக் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் கல்லூரிக்கு வந்து செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது என்பது மாணவர்களின் கருத்து. ஏழை, எளிய மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் என்றும் கூறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மாணவர்களின் போராட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் அரசு பள்ளி, கல்லூரி, பாலிடெக்னிக் மாணவர்களுக்கு இலவச பஸ்பாஸ் திட்டம் தொடரும் என்று அரசு அறிவிப்பு வெளியிட்டது.
நீடிக்கும் போராட்டம்
அரசு அறித்த பின்னரும் அதை கண்டு கொள்ளாத மாணவர்கள், பேருந்து கட்டண உயர்வை திரும்ப பெரும் வரை போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என்று கூறி 3வது நாளாக இன்று போராடி வருகின்றனர். மதுரை, கும்பகோணம், ராஜபாளையம், நாமக்கல், பெரம்பலூர் என்று பல ஊர்களில் மாணவர்கள் போராடி வருகின்றனர்.
மதுரை கல்லூரி மாணவர்கள்
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சாலையில் உள்ள மதுரைக்கல்லூரி மாணவர்கள் காலை முதலே வகுப்புகளை புறக்கணித்து விட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்றைய தினம் மூலக்கரை அருகே சாலை மறியல் செய்த மாணவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியது.
மாணவர்கள் மறியல்
நாமக்கல் ராசிபுரம் சாலையில் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உயர்த்தப்பட்ட பேருந்துக்கட்டணத்தை வாபஸ் வாங்க வேண்டும் என்று கூறி அரசுக்கு எதிராகவும் முதல்வருக்கு எதிராகவும் முழக்கமிட்டனர்.
திரும்ப பெற வலியுறுத்தல்
தஞ்சை மாவட்டம் கரந்தை உமாமகேஸ்வரானார் கல்லூரி முன்பு மாணவர்கள் ஆர்பாட்டம் நடத்தி வருகின்றனர். மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்ததன் காரணமாக பெரம்பலூர் பாரதி தாசன் உறுப்பு கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் தீவிரம்
சிவகங்கை அரசு மன்னர் துரைசிங்கம் கலைக்கல்லூரியில் நேற்று மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். பின்னர் மாணவர்கள், கல்லூரியில் இருந்து அரண்மனைவாசல் வரை பேரணியாக சென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டது.
வாபஸ் பெறும் வரை போராட்டம்
அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதையடுத்து கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டது. மாணவர்கள் போராட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் பல ஊர்களில் கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கட்டண உயர்வை திரும்ப பெறும் வரை போராடுவோம் என்று மாணவர்கள் கூறி வருகின்றனர்.