கர்நாடகா எல்லையில் பேருந்து போக்குவரத்து முற்றிலும் நிறுத்தம்.. முழு அடைப்பு வெற்றி
விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதனால் தமிழக-கர்நாடகம் எல்லைப் பகுதியில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது.
ஓசூர்: விவசாயிகளுக்கு ஆதரவாக முழு அடைப்புப் போராட்டத்தை நடைபெற்றது. ஓசூரில் முழு அடைப்பு போராட்டம் வெற்றிகரமாக நடந்தது. இதனால் தமிழக கர்நாடக எல்லையில் பேருந்து போக்குவரத்து முற்றிலும் முடங்கியது.
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் உள்ள விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள்.
விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகள், தொழிற்சங்கங்கள், காவிரி டெல்டா விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று முழு கடை அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தன.
சிறு,குறு நிறுவனங்கள்
ஓசூரில் உள்ள சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள் 2000க்கும் மேல் மூடப்பட்டன. ஓட்டல்கள், உழவர் சந்தைகளும் முழுமையாக அடைக்கப்பட்டு போராட்டம் வெற்றி பெற்றது.
உழவர் சந்தை
தமிழகத்தில் இருந்து பெங்களூருக்கு எடுத்துச் செல்லப்படும் காய்கறிகள் உழவர் சந்தையில் இருந்துதான் எடுத்துச் செல்லப்படுகிறது. இங்குள்ள உழவர் சந்தை முற்றிலுமாக மூடப்பட்டுள்ளதால் பெங்களூருக்கு காய்கறிகள் செல்வது முற்றிலும் தடைபட்டது.
போக்குவரத்து
கர்நாடகத்தில் தமிழகத்திற்கும், தமிழகத்தில் இருந்து கர்நாடகத்திற்கு நிறைய பயணிகள் சென்று வருவது வழக்கம். இந்த முழு அடைப்பு காரணமாக பேருந்துகள் முற்றிலுமாக இயக்கப்படவில்லை.
வர்த்தக நிறுவனங்கள்
இந்த முழு அடைப்பினால் 150 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டது. ஆனாலும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து வர்த்தக நிறுவனங்கள் முழுவதும் இந்த கடை அடைப்பில் பங்கேற்றன.