திருப்பூரில் ரூ.6 கோடி கேட்டு தொழிலதிபர் கடத்தல்- சேலம் அருகே விட்டு சென்ற மர்மகும்பலுக்கு வலை!!
சேலம்: திருப்பூரில் ரூ.6 கோடி கேட்டு காரில் கடத்தப்பட்ட தொழிலதிபரை, சேலம் ஆத்தூர் அருகே கடத்தல் கும்பல் விட்டுவிட்டுச் சென்றுள்ளது. இக்கும்பலை போலீசார் வலைவீசி தேடி வரூகின்றனார்.
திருப்பூர் மாவட்டம் இடுவன்பாளையத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஆறுமுகம் (46) நேற்றிரவு சுமார் 9 மணியளவில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த காரில் இருந்த 6 பேர் கொண்ட மர்மகும்பல் ஒன்று, இன்ஸ்பெக்டர் அழைத்து வரச் சொன்னதாக கூறியுள்ளனர். அந்த கும்பலில் போலீஸ் உடையில் இருந்த ஒருவர் அவ்வாறு கூறியதால், ஆறுமுகம் அவர்களுடன் காரில் சென்றுள்ளார்.

காரில் சென்ற போது, ஆறுமுகத்திடம் அவரது சொத்து விபரங்கள் குறித்து அந்த கும்பல் கேட்டறிந்துள்ளனர். பின்னர் ரூ.6 கோடி கொடுத்தால் உங்களை விட்டுவிடுகிறோம் என அந்த கும்பல் கூறியுள்ளது. ஆனால், ஆறுமுகம், தான் ஏற்கெனவே ரூ.2 கோடி கடனில் இருக்கிறேன், வேண்டுமானால் ரூ.5 லட்சம் தருகிறேன் கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த கடத்தல் கும்பல், ஆறுமுகத்தை அடித்து, அவரது கை மற்றும் கால்கள் கட்டிய நிலையில் சேலம் மாவட்டடம் ஆத்தூர் - தலைவாசல் அருகே விட்டுவிட்டுச் சென்றுள்ளனர்.
கட்டுக்களை தானே அவிழ்த்த ஆறுமுகம், இன்று காலை அப்பகுதியில் இருந்த டோல்கேட்டிற்கு சென்று அங்கு இருந்தவர்களின் உதவியை நாடியுள்ளார். பின்னர் இது குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. முன்னதாக நேற்றிரவு ஆறுமுகத்தை காணவில்லை என அவரது மனைவி திருப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதையடுத்து ஆறுமுகத்தை போலீஸார் மீட்டுச் சென்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தன்னை யாரோ சிலர் கடத்த முயற்சிப்பதாக திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் ஆறுமுகம் புகார் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கடத்தல் சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications