ஜல்லிக்கட்டில் காளைகள் துன்புறுத்தப்படுவதில்லை.. மறுபரீசிலனை செய்ய சி.ஆர். சரஸ்வதி கோரிக்கை
ஜல்லிக்கட்டு விளையாட்டில் காளைகள் துன்புறுத்தப்படுவதில்லை என்று சி. ஆர். சரஸ்வதி கூறியுள்ளார்.
சென்னை: ஜல்லிக்கட்டு விளையாட்டில் காளைகள் துன்புறுத்தப்படுவதில்லை. இதுகுறித்து மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக செய்தித் தொடர்பாளர் சி.ஆர். சரஸ்வதி கோரியுள்ளார்.
பொங்கல் பண்டிகையின் போது தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு விளையாட்டு வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்த விளையாட்டின் போது மாடுகள் துன்புறுத்தப்படுவதாகக் கூறி சுப்ரீம் தடைவிதித்தது. இதனையடுத்து தமிழக அரசு சார்பில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இம்மனு மீதான வழக்கின் இறுதி விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்றது. விசாரணையின் முடிவில், ஜல்லிக்கட்டு ஒரு பொழுதுபோக்கு விளையாட்டல்ல என்றும், ஜல்லிக்கட்டு என்பதே கொடூரமானது என்றும் கூறிய சுப்ரீம் கோர்ட், தமிழக அரசின் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்தது.
இதுகுறித்து, அதிமுக செய்தித் தொடர்பாளர் சி. ஆர். சரஸ்வதி கூறியதாவது:
சுப்ரீம் கோர்ட் சொல்லி இருப்பது போல் யாரும் காளைகளை துன்புறுத்துவது கிடையாது. காளைகள் இறந்ததாக வரலாறும் கிடையாது. காளைகள் மோதி இளைஞர்கள் இறந்திருக்கிறார்களே தவிர காளைகள் இறந்ததில்லை. இது ஒரு பாரம்பரிய விளையாட்டு. வீர விளையாட்டு. உச்ச நீதிமன்றம் நன்கு பரிசீலனை செய்து ஒரு நல்ல தீர்ப்பை சொல்லி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
ஜல்லிக்கட்டு விளையாட்டு குறித்து தமிழக அரசு தீர்மானிக்கக் கூடிய இடத்தில் இருந்தால் முதல்வர் தடை நீக்கி ஜல்லிக்கட்டை நடத்தி இருப்பார். இது மத்திய அரசும் உச்ச நீதிமன்றமும் சம்மந்தப்பட்ட விவகாரம். ஜல்லிக்கட்டின் தீர்ப்பு அவர்களின் கையில் இருப்பதால், எங்களால் முடிந்த வாதங்களை நாங்கள் எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறோம். தமிழக அரசு இந்த விளையாட்டை நடத்தியே தீர வேண்டும் என்ற வாதத்தை முன் வைத்து வருகிறது.
ஆனால், உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை பார்க்கும் போது உண்மையில் மனதிற்கு கஷ்டமாக இருக்கிறது. நீதிமன்றம் இதனை மறுபடியும் பரிசீலனை செய்ய வேண்டும். மத்திய அரசும் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம் என்று சி.ஆர். சரஸ்வதி கூறினார்.