''எனக்கு 3 உண்மை தெரிஞ்சாகனும் மேடம்''!.. ஜெயலலிதாவை நோக்கி வீரமணி
சென்னை: காவிரியை காரணம் காட்டி பாஜவை எதிர்ப்பதைப்போல காட்டிக் கொள்ளும் முதல்வர் ஜெயலலிதா பாஜவை கொள்கைஅடிப்படையில் எதிர்க்க தயாரா என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பினார்.
திமுக வேட்பாளர்களை ஆதரித்து சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் பேசிய வீரமணி கூறியதாவது:
பாஜவின் கொள்கைகள் பற்றி கேள்வி எழுப்ப தயாரா?:
பாஜகவும், அதிமுகவும் தேர்தலில் ரகசிய கூட்டணி வைத்துக்கொண்டுள்ளதாக விமர்சனம் எழுந்த நிலையில் காவிரி பிரச்னையில் பாஜக துரோகம் இழைத்துவிட்டதாக ஜெயலலிதா திடீரென குற்றம் சாட்டியுள்ளார்.
நதிநீர் பிரச்னையை எடுத்துக்கொண்டால் எந்த ஒரு கட்சியுமே மாநில உணர்வோடுதான் நடந்துகொள்ளும். கர்நாடகாவிலும் காங்கிரசும், பாஜகவும் அவ்வாறுதான் நடந்துகொண்டுள்ளன.
இதற்காக பாஜவை குறைகூறும் ஜெயலலிதா, பாஜவின் அடிப்படை கொள்கைகள் பற்றி கேள்வி எழுப்ப தயாராக உள்ளாரா?. அதிலும் மூன்று முக்கிய கேள்விகளுக்கு மட்டுமாவது ஜெயலலிதாவால் விடை கூறமுடியுமா?.
கேள்வி 1:
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதே, அதுகுறித்து ஜெயலலிதாவின் கருத்து என்ன?
கேள்வி 2:
அதே தேர்தல் அறிக்கையில் பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படும் என்று கூறப்பட்டுள்ளதே அதில் தமிழக முதல்வரின் நிலைப்பாடு என்ன?
கேள்வி 3:
காஷ்மீர் மாநிலத்துக்கு அரசியலமைப்பு சட்டம் 370வது பிரிவின் கீழ் சிறப்பு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது நீக்கப்படும் என்ற பாஜகவின் கொள்கைக்கு ஜெயலலிதா அளிக்கும் பதில்தான் என்ன?
இந்த மூன்று கேள்விகளுக்கும் ஜெயலலிதா பதில் அளிக்க வேண்டும். பத்திரிகையாளர்கள் இந்த கேள்விகளை தமிழக முதல்வரிம் கேட்க வேண்டும்.
நாடு பின்னோக்கி சென்றுவிடும்:
திராவிடர் கழகம் தேர்தலில் போட்டியிடாவிட்டாலும்கூட, திமுக தலைமையிலான கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நான் பிரச்சாரம் செய்து வருகிறேன். ஜாதியவாதமும், மதவாதமும் கைகோர்த்து இத்தேர்தலில் களம் காண்கின்றன. கொஞ்சம் ஏமாந்தாலும் நாடு பின்னோக்கி சென்றுவிடும். இதை கருத்தில்கொண்டுதான் சமூக நீதி இயக்கமான திராவிடர் கழகம் திமுக கூட்டணியை ஆதரிக்கிறது என்றார்.