ராமேஸ்வரம்: பிரிட்ஜோ மரணத்திற்கு நீதி கேட்டு மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்
இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட மீனவர் பிரிட்ஜோவுக்கு தங்கச்சிமடம் மீனவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்
ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையினரின் துப்பாக்கிச்சூட்டுக்கு பலியான மீனவர் பிரிட்ஜோவுக்கு தங்கச்சிமடம் போராட்டத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி மீனவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
ராமேஸ்வரம் அருகேயுள்ள தங்கச்சி மடம், மாந்தோப்பு கிராமத்தைச் சேர்ந்த பிரிட்ஜோ, சக மீனவர்களுடன் கடலுக்குச் சென்றார். தனுஷ்கோடி, ஆதம்பாலம் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு 4 படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்கள் மீது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 22 வயதான பிரிட்ஜோ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சில மீனவர்கள் காயமடைந்தனர்.
ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற பிரேத பரிசோதனையின்போது பிரிட்ஜோவின் உடலில் இருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கிக் குண்டு அகற்றப்பட்டது. மீனவர் பிரிட்ஜோவின் உடலை வாங்க மறுத்து அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் உயிரிழந்த மீனவரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அரசியல் கட்சித்தலைவர்கள் வைகோ, திருநாவுக்கரசர் ஆகியோர் நேரில் சென்று பிரிட்ஜோவின் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறியதோடு மீனவர் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்தனர்.
அரசு அறிவித்த நிவாரணத் தொகையையும் மறுத்துவிட்டு நிரந்தர நிவாரணம் கோரி போராடி வருகின்றனர். இலங்கை கடற்படையால் தமிழக மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து 3வது நாளாக போராட்டம் நடைபெறுகிறது. இலங்கை கடற்படையினரின் துப்பாக்கிச்சூட்டுக்கு பலியான மீனவர் பிரிட்ஜோவுக்கு தங்கச்சிமடம் போராட்டத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.